இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான லடாக் பகுதியினை சீனாவின் பகுதியில் இணைத்து சித்திரித்து தவறான இந்திய வரைபடத்தை வெளியிட்ட விவகாரத்தில் சமூக வலைத்தளமான டுவிட்டர் நிறுவனம் இந்திய அரசிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.
பாஜக., நாடாளுமன்ற உறுப்பினர் மீனாட்சி லேஹி தலைமையிலான எம்.பிக்கள் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக் குழு, டுவிட்டரின் தவறான வரைபடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது. டுவிட்டரின் இந்தச் செயல் இந்திய இறையாண்மைக்கு எதிரானது; கிரிமினல் குற்றத்திற்கு சமமானது என்று கூறியது.
இதை அடுத்து, டுவிட்டா் நிறுவன தலைமைச் செயல் அதிகாரியான ஜாக் டோா்ஸிக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை செயலா் அஜய் சாஹ்னி ஒரு கண்டனக் கடிதத்தை எழுதியிருந்தார். இதைத் தொடர்ந்து தவறான இந்திய வரைபடத்தை வெளியிட்ட விவகாரத்தில் டிவிட்டர் நிறுவனம் இந்திய அரசிடம் எழுத்து பூர்வமாக மன்னிப்புக் கோரியுள்ளது.
டிவிட்டர் நிறுவனத்தில் இருந்து நாடாளுமன்ற கூட்டுக் குழுவிற்கு அனுப்பப் பட்டுள்ள மன்னிப்புக் கோரல் கடிதத்தில் இந்தத் தவறு, இம்மாத இறுதிக்குள் சரிசெய்யப் பட்டு விடும் என்று அந்நிறுவனம் உறுதி அளித்துள்ளது.
இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படும் சீன ஆப்கள், வெளிநாட்டு செயலிகளுக்கு புகார்கள் மற்றும் அதன் விஷத் தன்மைக்கு ஏற்ப, இந்திய அரசு அவற்றைத் தடை செய்து வருவது குறிப்பிடத் தக்கது.