புது தில்லி: ஒவ்வொரு நாளும் தன் மனைவியின் காலைத் தொட்டுக் கும்பிட்டு வெளியில் செல்கிறார் மாநில அமைச்சர் ஒருவர். அவர், தில்லி மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சர் சந்தீப் குமார். ஹரியானா மாநிலம் சங்கதால் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தீப். இவரது தந்தை ராணுவத்தில் பணியாற்றியவர் என்பதால் தில்லியில் குடியேறியவர். ஹரியானாவில்தான் 2011ஆம் வருட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி, நாட்டிலேயே மிகக் குறைந்த ஆண் பெண் விகிதாச்சாரம் உள்ளது கண்டறியப்பட்டது. இப்படிப்பட்ட இடத்தில் இருந்து வந்தவர் சந்தீப். 34 வயதாகும் சந்தீப், கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி, மகளிர் தினத்தன்று, தில்லி சட்டமன்றக் கூட்டத்தில் வைத்து, தனது மனைவிக்கு மிகப் பெரும் நன்றியைத் தெரிவித்தார். எவ்வளவோ தியாகங்களைச் செய்து அவர் தன்னுடன் வாழ்ந்து வருவதாகவும், ஒவ்வொரு நாள் காலையிலும் அவரது காலைத் தொட்டு கும்பிட்டு வருவதாகவும் அவர் கூறினார். இவ்வாறு சந்தீப் கூறியதும் அங்கே பலத்த கைத்தட்டல்கள் எழுந்தன. கடந்த 2011 ஏப்.5ம் தேதி அவர் ரிதுவை திருமணம் செய்தாராம். முதலில் தில்லி தயாள்சிங் கல்லூரியில் படித்த போதுதான் சந்தித்தோம். அது 2003 ஜூலை 16. அப்போது நான் பிஏ முன்றாம் ஆண்டு படித்தேன். அப்போதுதான் ரிது கல்லுரியில் சேர்ந்தார். அப்போது நான் அவளை பாட்டுப்பாட சொல்லி ராக்கிங் செய்தேன். அவள் பாடினாள். அதன் பிறகு எங்களுக்குள் நட்பு ஏற்பட்டு 8 ஆண்டுகள் காதலித்தோம். பின்னர் 2011 ஏப்ரல் 5ம் தேதி திருமணம் செய்து கொண்டோம் என்று கூறுகிறார் சந்தீப். நான் மனைவி காலில் விழுவதை என் நண்பர்கள் ஜோக் அடித்து கிண்டல் செய்வார்கள் என்று கூறும் சந்தீப், தன் மனவியின் காலில் விழும்போது, அவர் புன்னகைப்பார் என்றும், வெற்றி பெறுங்கள், நீண்ட நெடிய மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை தொடரட்டும் என்று வாழ்த்துவார் என்றும் கூறுகிறார். ரிது இது குறித்துக் கூறுகையில், ‘ அவர் என் காலைத் தொட்டதும் நான் புன்சிரிப்புடன் வெற்றி பெற வாழ்த்துக் கூறுவேன்’ என்றார். 29 வயது ரிது. இருவரும் தங்களுக்குள் எந்த வித வேற்றுமையும் வந்ததாகக் கருதவில்லை என்று கூறுகின்றனர்.