கொரோனா பரவலுக்கு மத்தியிலும் பாதுகாப்புத் துறைக்கான ஒதுக்கீடு அதிகப்படுத்தப்பட்டுள்ளது மிக முக்கிய முடிவு என்று இந்திய விமானப் படை தளபதி பதாரியா தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் 2020-21ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். கொரோனா பரவல் காரணமாக இந்த பட்ஜெட் காகிதமில்லா பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது.
அதேபோல கொரோனாவுக்கு பின் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் என்பதால் இதில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கும் ஒதுக்கப்பட்ட தொகைகள் அதிகப்படுத்தப்பட்டன. கொரோனா தடுப்பூசி பணிகளை மேற்கொள்ள 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
எல்லையில் சீனாவுடனான மோதல் போக்கு அதிகரித்துள்ள நிலையில், பாதுகாப்பு துறை ஒதுக்கப்படும் தொகையும் சுமார் 7.4% அதிகப்படுத்தப்பட்டது. இந்தாண்டு மட்டும் சுமார் 4 லட்சத்து 78 ஆயிரத்து 195 கோடி ரூபாய் பாதுகாப்பு துறைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, புதிய ஆயுதங்களை வாங்க கடந்த முறை ஒதுக்கப்பட்ட ரூ1.14 லட்சம் கோடியைவிட 18% அதிகமாக ரூ.1.35 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாதுகாப்பு துறை ஒதுக்கப்படும் தொகை அதிகப்படுத்தப்பட்டுள்ளது குறித்து இந்திய விமானப் படை தளபதி பதாரியா கூறுகையில், “இந்த கொரோனா காரணமாக நமது நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளதை அனைவரும் அறிவோம். இந்தச் சூழ்நிலையில், பாதுகாப்புக்கு ஒதுக்கப்படும் தொகை அதிகப்படுத்தப்பட்டுள்ளது உண்மையில் மிகப் பெரிய விஷயம். இதற்காக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
கடந்தாண்டும்கூட பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டிருந்த தொகையைவிட கூடுதலாக 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவானது. முப்படைக்கும் தேவையான தளவாடங்களை கொள்முதல் செய்ய இந்தத் தொகை பயன்படுத்தப்பட்டது. இதன் மூலம் நமது ராணுவத்தின் திறன் அதிகரிக்கும்” என்றார், கடந்தாண்டு இந்தக் கூடுதல் தொகையைக் கொண்டு ஸ்பைஸ் -2000 , ஸ்பைக் டேங்க், எஸ்.ஐ.ஜி துப்பாக்கிகள் ஆகியவற்றை ரஷ்யாவிலிருந்து இந்தியா வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது, அதிலும் குறிப்பாக கல்வான் மோதலுக்கு பின் நிலைமை மிகவும் மோசமானது, எல்லையில் இரு தரப்பு ராணுவமும் தொடர்ந்து வீரர்களை குவித்து வருகின்றனர். இதனாலேயே இந்தியா தனது பாதுகாப்பு செலவுகளை தொடர்ந்து அதிகப்படுத்தி வருகிறது.