மீரட்டில் தனது கணவர், அவரது கேர்ள் பிரண்டுக்கு துணி வாங்கி கொடுப்பதை, அவரது மனைவி கையும் களவுமாக பிடித்தார். கோபத்தில் பொங்கிய மனைவி, துரோகம் செய்த கணவரை நடுரோடு என்றும் பாராமல் பொதுமக்கள் மத்தியில் அடி வெளுத்துவிட்டார். பிரச்னை பெரிதானதை அடுத்து, கணவரின் கேர்ள் பிரண்ட் அந்த இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார்.
மீரட்டை சேர்ந்த தம்பதியினர் அட்னன் மற்றும் ஆயிஷா. இவர்கள் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். கணவரின் நடத்தை காரணமாக இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை, சச்சரவுகள் நடந்து வந்திருக்கிறது. கணவர் தனக்கு துரோகம் செய்வதாக சந்தேகம் அடைந்த ஆயிஷா, கடந்த திங்கட்கிழமை காலை நேரத்தில், கணவனை பின் தொடர்ந்து சென்றிருக்கிறார்.
அவர் மீரட்டில் உள்ள சாஸ்திரி நகர் மார்க்கெட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கு கடையில் வேறொரு பெண்ணுடன் தனது கணவனை பார்த்திருக்கிறார். கடையின் வெளியே காத்திருந்த அவர், கணவரும் அந்த பெண்ணும் வெளியே வர, கண்வனை சராமரியாக தாக்க துவங்கிவிட்டார். கூட்டம் கூட, கணவரின் கேர்ள் பிரண்ட் அந்த இடத்தை விட்டு தப்பி ஓடினார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சண்டையை தீர்க்க முயற்சித்தனர். இருவரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்ற போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தினர். ஆயிஷாவை விவாகரத்து செய்து விட்டதாக அட்னன் கூற, அதற்கு போலீசார் சாட்சி கேட்டிருக்கின்றனர்.
அதற்கான சர்ட்டிபிகேட்டையோ, சாட்சியையோ அவரால் காண்பிக்க முடியவில்லை. ஆயிஷாவோ கணவன் தன்னை கொல்ல முயற்சிப்பதாக போலீசாரிடம் புகார் அளித்திருக்கிறார். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி புகாரில் தெரிவித்திருக்கிறார் ஆயிஷா.