ஆபாச சிடி விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜாரகிஹோளி சிறப்பு புலனாய்வு படை முன்பு ஆஜராகி அளித்த வாக்குமூலத்தில், ஒரு கும்பல் ரூ.100 கோடி கேட்டு தன்னை மிரட்டியதாக தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, இவ்வழக்கில் 7 பேர் கைதாகி உள்ளதாக சிறப்பு புலனாய்வு குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
மேலும், காங்கிரஸ் பிரமுகர்களுக்கு இதில் தொடர்புள்ளதாக பாஜ குற்றம்சாட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சராக இருந்தவர் ரமேஷ் ஜார்கிஹோளி. இவர் இளம்பெண் ஒருவருடன் உல்லாசமாக இருந்த ஆபாச சி.டி மீடியாக்கள், சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
சட்டரீதியாக இந்த விவகாரத்தை எதிர்கொள்வேன் என்று கூறினார். இதைத் தொடர்ந்து, இவர் மீது போலீசில் சமூக ஆர்வலர் தினேஷ் கல்லஹள்ளி அளித்த புகாரை திடீரென திரும்ப பெற்றார்.
தற்போது, இவ்வழக்கை சிறப்பு புலனாய்வு படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சி.டி. போலியானது என்று ரமேஷ் ஜாரகிஹோளி கூறிய வாக்குமூலத்தை வைத்து எஸ்.ஐ.டி போலீசார் முதலில் சந்தேகத்தின் பேரில் 7 பேரை பிடித்து விசாரித்தனர்.
இவர்கள் சி.டி தயாரிப்பில் கோவா, பெங்களூரு, தமிழகம், ஐதராபாத் ஆகிய இடங்களில் தங்கி ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இவர்கள் ரமேஷ் ஜாரகிஹோளியை தொடர்பு கொண்டு ரூ.100 கோடி பணம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் ஒப்புக் கொள்ளாததால் சி.டியை வாய்ஸ் டப் செய்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
சி.டியில் உள்ள பெண்ணுக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஆனால், அவர் இதுவரை பதில் அளிக்கவில்லை. கைதானவர்கள், ரமேஷ் கவுடா, ஸ்ரவன், பவதி, பீதரை சேர்ந்த ஆகாஷ் தளவாடு, தொட்டப்பள்ளாபுராவை சேர்ந்த லட்சுமி பதி, கோலார் சேத்தன், ராம்நகரை சேர்ந்த பெண் ஆசிரியை என்று தெரியவந்துள்ளது.
இவர்கள் வீடியோ தயாரிப்பதற்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் பெங்களூரு எஸ்.பி ரோடு பகுதியில் ரூ.1.54 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளனர். ஆந்திரா, தமிழகம், கோவாவில் இருந்து சி.டி தயாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
இதற்கு துமகூருவை சேர்ந்த பத்திரிகையாளர், தேவனஹள்ளியை சேர்ந்த இணையதள ஹேக்கர் ஒருவர், இந்த கும்பலுக்கு உதவி செய்துள்ளனர்.
தற்போது அவர்கள் தலைமறைவாக இருப்பதால், ஹெக்கரின் மனைவிக்கு எஸ்.ஐ.டி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கிடையில், பிடிபட்ட சிக்கமகளூரு இளைஞர்களில் ஒருவர் வாய்ஸ் டப் செய்துள்ளார் என்பது எப்.எஸ்.எல் அறிக்கையில் வெளியாகியுள்ளது. பெண் ஆசிரியைதான், இளம் பெண்ணை கோவாவில் அறை எடுத்து தங்க வைத்துள்ளார் என்பதும் உறுதியாகியுள்ளது.
இந்த ஆபாச சி.டி விவகாரத்தில் கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே சிவகுமார், எம்எல்ஏ லட்சுமி ஹெம்பால்கருக்கு தொடர்பு இருப்பதாக பாஜ.வை சேர்ந்தவர்கள் டிவிட்டர் மூலமாக குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதை காங்கிரஸ் மறுத்து வருகிறது. இருப்பினும், கர்நாடகா அரசியல் வட்டாரத்தில் இந்த ஆபாச சி.டி விவகாரம் நாளுக்கு நாள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.