பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நடிகர் சுஷாந்த் சிங் மரணம். அவரது மரணம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது பாலிவுட் திரையுலகில் கலந்திருக்கும் போதைப்பொருள் கும்பல் குறித்த தகவல் வெளியாக நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த போதைப்பொருள் வழக்கில், சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரவர்த்தி, அவரது சகோதரர் சோவிக் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
விசாரணை மற்றும் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் பிரபல நடிகைகள் பலரும் கைது செய்யப்பட்டனர். சிலர் ஜாமீனில் வெளியேவந்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று காலை பாலிவுட் நடிகர் அஜாஸ் கான் கைது செய்யப்பட்டார். அஜாஸ் கான் ராஜஸ்தானில் இருந்து நேற்று இரவு மும்பை திரும்பினார். மும்பை விமான நிலையத்தில் அவரை போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அழைத்துச் சென்று தனியிடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
மேலும் அவரிடம் 8 மணி நேரத்திற்கு மேலாக அவரிடம் போதை பொருள் தடுப்பு போலீசார் விமான நிலையத்தில் விசாரணை நடத்தினர். அந்தேரி மற்றும் லோகண்ட்வாலா பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையின்போது, அஜாஸ் கான் வீட்டில் இருந்து போதை மாத்திரைகள் கிடைத்ததாக போலீஸ் தரப்பில் தகவல் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த வியாழக்கிழமை ஷாதாப் பாரூக் ஷாயிக் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து தடை செய்யப்பட்ட மெபெட்ரோன் என்ற போதை மருந்து 2 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. ஷாதாப் பாரூக் ஷாயிக் என்ற போதைப்பொருள் வியாபாரியுடன் அஜாஸ் கான் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் நிலையில் இன்று கைதாகியிருக்கிறார்.