பீகாரில் உயிரோடு இருக்கும் கொரோனா நோயாளிக்கு இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாட்னா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கடந்த 3-ம் தேதி அனுமதிக்கப்பட்ட சுனு குமார், கொரோனா தொற்றால் உயிரிழந்ததாக அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், மருத்துவமனை தரப்பில் இறப்பு சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மின் மயானத்திற்கு சென்ற சுனு குமாரின் மனைவி கவிதா தேவி, , கணவரின் உடலை கடைசியாக பார்க்க சென்றபோது, அங்கு வைக்கப்பட்டிருந்தது தமது கணவனின் உடல் அல்ல, வேறு ஒருவரின் உடல் என்பதை கண்டு பேரதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதனையடுத்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் சுனு குமார் உயிருடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது தெரியவந்துள்ளது.
இதனிடையே, பணியின்போது அலட்சியமாக இருந்த மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.