மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் சமாதிக்கு சென்ற வாலிபர், 20 நாட்களாக வீடு திரும்பவில்லை என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
மைசூரு டி.நரசிபுரா அருகே உள்ள காதமாரனஹள்ளியை சேர்ந்தவர் தர்ஷன், 23. பி.காம் படித்து வரும் இவர் புனித்தின் ரசிகர்.
புனித் இறந்தது முதல் வித்தியாசமாக நடந்து கொண்டார்.நவம்பர் 9ல் அவர் சமாதியை பார்க்க செல்வவதாக கூறி சென்றவர், ‘இன்னும் வீடு திரும்பவில்லை’ என பெற்றோர் கூறி உள்ளனர்.
இது குறித்து தாய் குமாரி கூறியதாவது: புனித் படம் வெளியாகும் போதெல்லாம் என் மகன் அந்த போட்டோக்களை சேகரித்து வந்தார்; அவரையே பின்பற்றி வந்தார்.
ஆனால் அவர் இறந்த தகவலை கேட்டது முதல், விசித்திரமாக நடந்து கொண்டார். அவரது இறுதி சடங்குக்கு அழைத்து செல்லுமாறு கூறினார். எங்களால் பெங்களூரு சென்று வர முடியவில்லை. தினமும் மகனை சமாதானப்படுத்தியபடி இருந்தோம்.
எங்களுக்கு தெரியாமல் ஒருநாள், புனித் படத்தை கையில் பச்சை குத்தி கொண்டு வந்தார்.பின் சுவரில் ஓங்கி அடித்து கொண்டும், புனித் படத்தை பார்த்து அழுதபடியுமே இருந்தார்.
நவம்பர் 9ல் புனித்தின் 11வது நாள் நிகழ்ச்சிக்கு செல்கிறேன் என்றார்; நாங்கள் வேண்டாம் என்றோம். அதே நாள் கல்லுாரிக்கு செல்வதாக கூறி சென்றவர், இன்னும் வீடு திரும்பவில்லை.
புனித் கடவுளாகி விட்டார். அவர் தான் எங்கள் மகனை கண்டுபிடித்து தர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்