எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள் அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக எலக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சுற்றுச்சூழல் மாசு அடைவதைத் தவிர்க்க இந்த வாகனங்கள் ஊக்குவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் எலக்ட்ரிக் வாகனங்கள் சார்ஜ் தீர்ந்துபோனால், அதனை மீண்டும் சார்ஜ் செய்ய ஏதுவாக மத்திய அரசு புதிய அறிவிப்பை தற்போது வெளியிட்டிருக்கிறது.
இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதத்தில் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது.
2020ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, கடந்த 2021ம் ஆண்டு எலக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை 240 சதவிகிதம் அதிகரிக்கிறது.
2021 டிசம்பர் மாதம் எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையில் உத்தரப்பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது. உத்திரப்பிரதேசத்தில் மட்டும் 23% எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளது.
மொத்த விற்பனையில் மகாராஷ்டிரா 13%, கர்நாடகா 9%, ராஜஸ்தான் 8%, டெல்லி 7%, தமிழ்நாடு 7% என்ற அளவில் பங்கு வகிக்கின்றன.
எலக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜிங் மையங்கள் அமைக்க பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது மத்திய அரசு. தனிநபரோ அல்லது நிறுவனங்களோ இந்த சார்ஜிங் மையங்களை எங்கு வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் இதற்கு எந்த உரிமமும் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளது. மத்திய அரசு இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்துடன் செயல்படவிருக்கிறது.
இந்தத் திட்டம் வருவாய் பகிர்வு அடிப்படையில் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நாடு முழுதும் விரைவில் இதுபோன்ற சார்ஜிங் மையங்கள் திறக்கப்படும்.
நகர எல்லையில் மூன்று கிலோ மீட்டருக்கு ஒரு சார்ஜிங் மையமும், நெடுஞ்சாலைகளில் 25 கிலோ மீட்டருக்கு ஒரு சார்ஜிங் மையமும் அமைக்கப்படும். அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் இதனை செயல்படுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு உள்ளது.
இதையடுத்து மத்திய அரசின் எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப மேம்பாட்டு விரிவாக்க மையம் சார்பில் எலக்ட்ரிக் வாகனம், சார்ஜிங் ஸ்டேஷன் பயிற்சி அனைத்து மாநிலங்களிலும் நடக்கிறது.
இதில் எலக்ட்ரிக் சைக்கிள், எலக்ட்ரிக் டூவீலர், கார் தொழில்நுட்பம்,சார்ஜிங் ஸ்டேஷன் அமைப்பது, ஸ்டேஷன் மாடல்கள், அரசு சட்ட திட்டங்கள் குறித்து கற்றுத்தரப்படுகிறது.
இது பொதுமக்களுக்கும் பயன்படும், மேலும் எலக்ட்ரிக் வாகனம் பயன்படுத்தும் பலரும் இந்த சார்ஜிங் மையங்களால் பயன் அடைவார்கள்.