புது தில்லி:
காங்கிரஸ் கட்சி செய்த பாவங்களுக்கான தண்டனையை நாடு சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளாகியும் மக்கள் இன்னும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். பாதிப்பு இன்னும் போகவில்லை என்று கூறினார் பிரதமர் நரேந்திர மோடி.
குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்திற்கு நன்றி தெரிவித்துப் பேசினார் பிரதமர் மோடி. அவரது இன்றைய உரை குறித்து பெரிதும் எதிர்பார்ப்பு நிலவியது. இன்றைய அரசியல் சூழலில், பட்ஜெட் குறித்த விவாதங்கள் ஊடகங்களில் பரவலாக தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், பிரதமர் மோடியின் உரை பெரிதும் எதிர்பார்க்கப் பட்டது. அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் விதத்தில் மோடி பேசினார்.
நாடாளுமன்ற மக்களவையில் பேசியபோது, நாங்கள் ஜனநாயகத்தின் அடையாளம், காங்கிரஸ் பிரிவினைவாதத்தின் அடையாளம் என்றார் மோடி!
அவரது உரையில்… நாட்டின் வளர்ச்சி குறித்தும், நாடு முழுதும் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் குடியரசுத் தலைவரின் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் நோக்கத்தில் எதிர்க்கட்சிகளான நீங்கள் நாடாளுமன்றத்தின் கதவை மூடினீர்கள். ஆனால் நாடு சுதந்திரம் பெற்று 70 வருடங்கள் கடந்த பின்னரும்கூட 125 கோடி மக்கள் காங்கிரஸ் செய்த பாவங்களுக்கான தண்டனையை ஒவ்வொரு நாளும் அனுபவித்து வருகின்றனர். காங்கிரஸ் என்றாலே பிரிவினைதான்.
வாஜ்பாய் ஆட்சி காலத்திலும் கூட மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. ஆனால், அவை அனைவரின் நம்பிக்கையை பெற்று சுமுகமாக நடைபெற்றன. ஆனால் அரசியல் லாபத்தைக் கருதி, ஆந்திராவை காங்கிரஸ் அவசரகதியில் பிரித்து குழப்பத்தை ஏற்படுத்தியது. எந்த வித முன்னேற்பாடும் செய்யாமல், ஆந்திரத்தைப் பிரித்தது காங்கிரஸ்.
புதிய மாநிலங்களை உருவாக்குதல் என்று யோசிக்கும் போது, வாஜ்பாய் ஆட்சியில் மூன்று மாநிலங்கள் உருவாக்கப் பட்ட விதத்தைப் பார்க்கிறேன். உத்தரப் பிரதேசத்தில் இருந்து உத்தராகண்ட், மத்தியப் பிரதேசத்தில் இருண்டு சட்டீஸ்கர், பீகாரில் இருந்து ஜார்க்கண்ட் என மூன்று மாநிலங்கள் உருவாக்கப்பட்ட விதம் குறித்து நினைத்துப் பார்க்கிறேன். அரசியல் லாபத்திற்காக எந்த முடிவும் எடுக்கக்கூடாது என்பதை வாஜ்பாய் செய்து காட்டினார். சுயநலத்திற்காக காங்கிரஸ் நாட்டை பிரித்தது. 70 வருடங்களுக்கு முன் தேர்தல் காரணங்களுக்காகவும், அற்ப காரணங்களுக்காகவும் நாட்டையே காங்கிரஸ் பிரித்தது. காங்கிரசின் சுயநலத்தால் 125 கோடி மக்களும் இன்று அவதிப்பட்டு வருகின்றனர். – என்று பேசினார் மோடி.