புதுதில்லி:
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு கடந்த மாதம் 29ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்து முடிந்ததை அடுத்து, பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் முக்கிய மசோதாக்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப் பட்டுள்ளன.
நேற்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேசிய போது, அவரைப் பேச விடாமல் காங்கிரஸ் எம்.பி. ரேணுகா சவுத்ரி சத்தம் போட்டு சிரித்துக் கொண்டிருந்தார். இதனால் அவை நடவடிக்கைகள் மட்டுப் பட்டன. மோடி பேச இயலாமல் கூச்சல் ஏற்பட்டது. இந்நிலையில், ரேணுகா பெயரை குறிப்பிட்டு, அவைத்தலைவர் வெங்கய்ய நாயுடு கையமர்த்தினார். ஆனால் தொடர்ந்து ரேணுகா சிரித்துக் கொண்டே இருந்தார்.
இந்நிலையில், அவரை சிரிக்க விடுங்கள் என்று கூறிய மோடி, ராமாயணத்தில் சூர்ப்பனகை சிரித்தாள். அதன் பின்னர் அப்படி ஒரு சிரிப்பை இப்போதுதான் கேட்பதாகக் கூறினார். இதனைக் கேட்டதும் பாஜக., எம்பி.,க்கள் பலத்த சிரிப்பொலி எழுப்பினர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்த விவகாரத்தை இன்று கையில் எடுத்த காங்கிரஸ் எம்.பி.க்கள், மாநிலங்களவையில் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர்.
இதனால் அவையை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, மாநிலங்களவை பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. 12 மணிக்கு அவை கூடியபோதும் இதே நிலை நீடித்தது. இதனால் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.