லக்னோ vs டெல்லி
டி காக் ஆடிய கலக்கலான ஆட்டம்
- K.V. பாலசுப்பிரமணியன்
நேற்று, ஏப்ரல் ஏழாம் நாள் லக்னோ, டெல்லி அணிகளுக்கிடையே மும்பையின் டி.ஒய்.பட்டீல் கிரிக்கெட் மைதானத்தில், ஐ.பி.எல்லின் 15ஆவது போட்டி நடந்தது. முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் மூன்று விக்கட் இழப்பிறகு 149 ரன் எடுத்தது.
பின்னர் ஆடிய லக்னோ அணி 19.4 ஓவரில் நாலு விக்கட் இழப்பிற்கு 155 ரன் எடுத்து டெல்லி அணியை வெற்றி கொண்டது.
டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் டெல்லி அணியை மட்டையாடச் சொன்னது. முதலில் அவுட்டானவர் பிருத்வி ஷா. 7.3 ஓவரில் அவர் அவுட்டானார்; அப்போது அவருடைய ஸ்கோர் 61; அணியின் ஸ்கோர் 67. அப்படியானால் பிருத்வி ஷா எப்படி ஆடியிருப்பார் என நீங்கள் கற்பனை செய்து கொள்ளலாம்.
வேகப் பந்து வீச்சு, சுழல் பந்து வீச்சு என எதையும் அவர் விட்டுவைக்கவில்லை. அதன் பின்னர் லக்னோ பந்துவீச்சாளர்கள் பிரமாதமாக பந்து வீசினர். ரிஷப் பந்த், சர்வராஸ் கான் இருவரும் ஆட்டமிழக்காமல் இறுதி வரை ஆடியபோதும், அவர்களால் அதிக ரன் சேர்க்க இயலவில்லை.
இதில் கிருஷ்ணப்பா கவுதம் ரிஷப்பிற்கு ஒரு மெய்டன் ஓவர் வேறு வீசினார். அடுத்து ஆடிய லக்னோ அணியின் அணித் தலைவர் ராகுல் இந்த ஆட்டத்திலும் மிக மிக மெதுவாக ஆடினார்.
ஆனால் மற்றொரு தொடக்க வீரரான டி காக் 16 ஓவர் வரை ஆடி, 52 பந்துகளில் 80 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். வெற்றி உறுதி என்ற நிலையில் இருந்தபோது தீபக் ஹூடா ஆட்டமிழந்தார். இருப்பினும் ஆயுஷ் பதோனி ஒரு சிக்ஸ், ஒரு ஃபோர் அடித்து லக்னோ அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.