ரேஷன் கடைகளில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை வைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை ஏற்க முடியாது என்று, கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார் என்பதுதான் இன்றைய செய்தி.
இந்த செய்தியின் விவரம்: கேரளா சட்டசபை கூட்டத் தொடரில் பேசிய உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சுரேஷ் கூறுகையில், ”கேரளாவில் உள்ள 14,000 ரேஷன் கடைகளில் பிரதமரின் புகைப்படம் அடங்கிய பேனர்கள் வைக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல், தேர்ந்தெடுக்கப்பட்ட 550 ரேஷன் கடைகளில், பிரதமரின் செல்பி பாயின்ட்களை நிறுவவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது,” என்றார்.
இது குறித்து, ஐ.யு.எம்.எல்., – எம்.எல்.ஏ., அப்துல் ஹமீது எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், ”ரேஷன் கடைகளில் தேசிய உணவு பாதுகாப்புச் சட்ட இலட்சினை உடன், பிரதமரின் புகைப்படத்தை வைப்பதற்கும், செல்பி பாயின்ட் உருவாக்குவதற்குமான மத்திய அரசின் உத்தரவை ஏற்கப் போவதில்லை. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், இது பிரசாரத்தில் ஒரு யுக்தியாகவே கருதப்படுகிறது. இது சரியல்ல என மத்திய அரசுக்கு தெரிவிக்கப்படும். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தை அணுகுவது குறித்தும் ஆலோசிக்கப்படும்,” என்று குறிப்பிட்டார்.
பிரதமரின் செல்பி பாயிண்ட் என்ற இந்த திட்டத்துக்கு தமிழகத்தில் நேரடியான எதிர்ப்பை இதுபோல் தமிழக அரசு இதுவரை பதிவு செய்யவில்லை என்றாலும், மறைமுகமாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
சொல்லப்போனா, அரசியலுக்காக, தமிழர்களுக்கு மத்திய மோடி அரசு கொடுப்பதை, மாநில ஸ்டாலின் அரசு தடுத்தும் மறைத்தும் வருகிறது என்றே சொல்லலான்ம். மத்திய அரசு தமிழர்களை வஞ்சிக்கிறது என்று விளம்பரப்படுத்தி அரசியல் செய்து வரும் ஸ்டாலின் அரசு, வெகு காலமாகவே மத்திய மோடி அரசு கொடுப்பதை பட்டவர்த்தனமாக தடுத்தும் மறைத்தும் ஸ்டிக்கர் ஒட்டி தங்கள் சாதனைகளைப் போல் விளம்பரப்படுத்தியும் வருகிறது.
அதன் ஓர் அம்சம்தான், தற்போது அரிசி விலை உயர்ந்திருக்கும் இந்நேரத்தில், மத்திய அரசு அளிக்கும் ‘பாரத் அரிசி’யை மக்களின் பார்வையில் இருந்து மறைத்து வருகிறது தமிழக அரசு. இது குறித்த தகவல்களும் மக்களைச் சென்று சேராமல் பார்த்துக் கொள்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
நாடு முழுவதும் அரிசியின் சில்லறை விற்பனை விலை 15% அதிகரித்துள்ள நிலையில், மத்திய அரசு மானிய விலையில் ‘பாரத் அரிசியை’ விற்பனை செய்கிறது. கூட்டுறவு சங்கங்களுக்கு முதல்கட்டமாக 5 லட்சம் டன் அரிசியை சில்லறை சந்தையில் விற்பனை செய்ய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இது கேரளத்தில் பெருமளவில் மக்களைச் சென்றடைந்து, பலரும் பாராட்டி வருகிறார்கள். அதே நேரம் தமிழகத்தில் இது குறித்த விழிப்புணர்வு ஏதுமில்லை!
ஏற்கெனவே மத்திய அரசு ரேஷன் கடைகளின் மூலம் பொது மக்களுக்கு வழங்கும் மானிய விலை அரிசி குறித்த தகவல்களை மறைத்து ஸ்டிக்கர் ஒட்டுவதில் தமிழக அரசு முனைப்புடன் செயலாற்றி வருகிறது. மற்ற மாநிலங்களில் மத்திய அரசின் பங்கு எவ்வளவு அதன் மூலம் மக்களுக்கு வழங்கப்படும் தொகை எவ்வளவு என்பதெல்லாம் விவரமாக குறிப்பிட்டு ரேஷன் கடைகளில் ரசீதுகள் வழங்கப்படுகின்றன. ஆனால் தமிழகத்தில் ரேஷன் கடைகளில் துண்டு சீட்டில் எழுதி எடை போடுபவர் அப்படியே கிழித்து வெளியில் எறிந்து விடுகிறார். அதன் மூலம் மத்திய அரசு தமிழர்களுக்கு வழங்கும் மானியங்கள், சலுகைகள், இலவசங்கள் குறித்த விழிப்புணர்வு துளியும் சென்று சேராமல் தமிழகத்தின் ஸ்டிக்கர் விடியல் அரசு பார்த்துக் கொள்கிறது.
இது குறித்த புகார்கள் பெருமளவில் சென்று சேரவே, மத்திய அரசு ரேஷன் கடைகளில் பிரதமரின் ‘செல்பி பாயின்ட்’ என்ற அம்சத்தை முன்வைக்க நினைத்தது. அதற்காக தமிழக ரேஷன் கடைகளில் இடம் ஒதுக்குமாறு கூறியும் தமிழக அரசு ஒரேயோர் இடத்தைக் கூட அடையாளம் காட்டவில்லை! இது எதனால் என்பதைப் புரிந்து கொள்வதில் நமக்கு அப்படி ஒன்றும் சிரமமும் இல்லை!
தமிழக ரேஷன் கடைகளில், 96 லட்சம் முன்னுரிமை கார்டுதாரர்களுக்கு, ஒவ்வொரு நபருக்கும் மாதம் தலா, 5 கிலோ அரிசியும், 18.65 லட்சம் அந்தியோதயா கார்டுதாரர்களுக்கு தலா, 35 கிலோ அரிசியும் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த அரிசியை மத்திய அரசு, இந்திய உணவுக் கழகம் வாயிலாக, தமிழகத்திற்கு இலவசமாகவே வழங்குகிறது.
அதன்படி மாதம், முன்னுரிமை பிரிவுக்கு, 1.42 லட்சம் டன் அரிசியும்; அந்தியோதயா பிரிவுக்கு, 62,650 டன் அரிசியும் இலவசமாக வழங்கப்படுகிறது. 1 கிலோ அரிசி விலை சராசரியாக, 39.20 ரூபாயாக உள்ளது. அரிசி மட்டுமின்றி, இரு பிரிவு கார்டுதாரர்களுக்கும் இலவசமாக வழங்க, மாதம் 8,500 டன் கோதுமையும்தமிழகத்திற்கு வழங்கப்படுகிறது. இலவச அரிசித் திட்டம், இம்மாதம் முதல் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தற்போது மக்களவைக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மத்திய அரசு வழங்கும் இலவச அரிசித் திட்டத்தை மக்களிடம் விளம்பரப்படுத்தும் வகையில், நாடு முழுதும் உள்ள ரேஷன் கடைகளில், பிரதமர் உருவப் படத்துடன் கூடிய, ‘செல்பி பாயின்ட்’ ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில்தான் தமிழகத்திலும் 1,500 ரேஷன் கடைகளில் பிரதமரின் செல்பி பாயின்ட் அமைக்க, அந்தக் கடைகளை அடையாளம் கண்டு தகவல் அளிக்குமாறு, தமிழக கூட்டுறவு மற்றும் உணவுத் துறைக்கு, மத்திய உணவு துறை உத்தரவிட்டுள்ளது.
ஆனால், மக்களவைக்கான தேர்தல் அறிவிப்பு, இம்மாத இறுதி அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் வெளியாகவுள்ளதால், அதற்குள் செல்பி பாயின்ட் அமைக்கும் பணிகளை முடிக்க மத்திய அரசு திட்டமிடுகிறது.
எனினும் ஸ்டிக்கர் விடியல் அரசு, முன்னாள் முதல்வர் கருணாநிதி, இந்நாள் முதல்வர் ஸ்டாலினின் படங்களை மாட்டி வைத்து குடும்ப விளம்பரம் செய்து கொண்டு ரேஷன் கடைகளில் அரசியல் நடத்தி வருகிறது. எனவே இதுவரை, ஓர் இடம் கூட மத்திய அரசுத் தரப்புக்கு அடையாளம் காட்டாமல், தமிழக அரசு இழுத்தடித்து வருகிறது.