குஜராத்தில் அமைந்துள்ள நாட்டின் மிக நீளமான “சுதர்ஷன் சேது” கேபிள் பாலத்தை ரிப்பன் வெட்டி பிரதமர் மோடி திறந்து வைத்தார். முன்னதாக, புகழ்பெற்ற துவாரகாதீசர் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி பூஜை மற்றும் தரிசனம் செய்தார். துவாரகா நகரம் மூழ்கியதாக நம்பப்படும் இடத்தில் ஆழ்கடலில் பிரதமர் மோடி சென்று பார்த்தார்.
கடலுக்கு அடியில் நீரில் மூழ்கிய துவாரகா நகரை பார்வையிட்டு பிரார்த்தனை செய்தார் பிரதமர் மோடி. கடலுக்கடியில் மயிலிறகை காணிக்கையாக செலுத்தி வழிபட்டு வந்ததாக பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
பாலத்தின் சிறப்பம்சங்கள்:
- ஓகா மற்றும் பேட் துவாரகா தீவை இணைக்கும் “சுதர்ஷன் சேது” பாலம் ரூ.979 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.
- 2.3 கி.மீ நீளமுள்ள இந்தப் பாலத்திற்கு 2017 அக்டோபர் மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
- இந்த நான்கு வழிச்சாலை பாலம் 27.20 மீட்டர் அகலம் உள்ளது. பாலத்தில் இரண்டு பக்கமும் 2.50 மீட்டர் அகல நடைபாதைகள் உள்ளன.
- சுதர்ஷன் சேது பாலம் தனித்துவமான வடிவமைப்புள்ளது. பாலத்தின் நடைபாதை பகவத் கீதையின் வசனங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இருபுறமும் கிருஷ்ணரின் உருவங்கள் அமையப் பெற்றுள்ளன.
- நடைபாதையின் மேல் பகுதியில் சோலார் பேனல்கள் நிறுவப்பட்டு ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
- இந்தப் பாலம், புகழ்பெற்ற துவாரகாதீசர் கோயிலுக்கு வரும் மக்கள் மற்றும் யாத்ரீகர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.
நிகழ்வு குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி, ” நாட்டின் மிக நீளமான “சுதர்ஷன் சேது” கேபிள் பாலத்தை இன்று திறந்து வைத்ததால், மகிழ்ச்சி அடைகிறேன். வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான நமது உறுதிப்பாட்டின் சான்று” என பதிவிட்டுள்ளார்.