வங்கதேசத்துக்கு எதிரான டி20 போட்டியில் இறுதிப் போட்டியில் வென்று இந்திய அணி சேம்பியன் பட்டம் வென்றது.
இலங்கையில் நடைபெற்று வரும் நிதாஹாஸ் டி20 முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா – வங்கதேச அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.
வங்கதேச அணியின் தொடக்க வீரர்களான தமிம் இக்பால், லித்தோன் தாஸ் ஆகியோர் ஓரளவு நன்றாக ஆடினர். முதல் மூன்று ஓவரில் வங்கதேசம் 26 ரன்கள் எடுத்திருந்தது. வாஷிங்டன் சுந்தர் வீசிய 4வது ஓவரின் 2-வது பந்தில் லித்தோன் தாஸ் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரை சாஹல் வீசினார். இந்த ஓவரில் சாஹல் தமிம் இக்பாலையும், சவுமியா சர்காரையும் வீழ்த்தினார். இதனால் வங்கதேசத்தின் ரன் வேகம் மட்டுப் பட்டது.
3வது வீரராகக் களம் இறங்கிய சபீர் ரஹ்மான் சிறப்பாக விளையாடினார். அவருடன் ஆடிய மெஹ்மதுல்லா 21 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார். சபிர் ரஹ்மான் சிறப்பாக விளையாடி 50 பந்தில் 7 பவுண்டரி, 4 சிக்சருடன் 77 ரன்கள் எடுத்து 19வது ஓவரில் ஆட்டமிழந்தார். ஷர்துல் தாகுர் வீசிய கடைசி ஓவரில் வங்கதேச அணி இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ருடன் 18 ரன்கள் எடுக்க 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் குவித்தது வங்கதேசம்.
167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணியில், தொடக்க வீரர்களாக ஷிகர் தவான், ரோகித் சர்மா ஆகியோர் களமிறங்கினர். தவான் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சுரேஷ் ரெய்னா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா உடன், கே.எல். ராகுல் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். இருவரும் சேர்த்து 51 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ராகுல் ஆட்டமிழந்தார். அவர் 14 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து ரோகித் உடன் மணிஷ் பாண்டே இணை சேர்ந்தார். ரோகித் சர்மா 35 பந்துகளில் அரை சதம் கடந்தார். ரோகித் 56 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆட்டமிழந்தார். பின் தமிழக வீரர் விஜய் சங்கர் களமிறங்கினார். சர்வதேச போட்டிகளில் விஜய் சங்கர் பேட்டிங் செய்யும் முதல் போட்டி இது என்பது குறிப்பிடத் தக்கது.
மணிஷ் பாண்டே 27 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின் தினேஷ் கார்த்திக் களமிறங்கினார். அது ஒரு இக்கட்டான நேரம். இந்திய அணி வெற்றி பெற 2 ஓவரில் 34 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில், தினேஷ் கார்த்திக் அதிரடி காட்டினார். 19-வது ஓவரில் தினேஷ் கார்த்திக், இரண்டு சிக்ஸர், இரண்டு பவுண்டரி, ஒரு இரண்டு ரன் உட்பட 22 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. முதல் மூன்று பந்துகளில் இந்திய அணி 3 ரன் எடுத்தது.
நான்காவது பந்தை விஜய் சங்கர் பவுண்டரிக்கு அனுப்பினார். ஐந்தாவது பந்தில் அவர் கேட்ச் ஆகி வெளியேறினார். கடைசி பந்தில் வெற்றிக்கு ஐந்து ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தினேஷ் கார்த்திக் சிக்ஸர் அடித்தார். இதன் மூலம் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்திக் 8 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரி உட்பட 29 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தார். இந்தப் போட்டியின் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்ததன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெறச் செய்த வீரர்கள் பட்டியலில் ஐந்தாவது வீரராக தினேஷ் கார்த்திக் இடம் பிடித்துள்ளார்.
தினேஷ் கார்த்திக் ஆட்டநாயகன் விருது பெற்றார். ஐந்து போட்டிகளில் 8 விக்கெட் வீழ்த்திய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் தொடர் நாயகன் விருது பெற்றார். வெற்றி பெற்ற இந்திய அணிக்கு இலங்கை அதிபர் மைத்ரீபால சிறீசேன கோப்பையை வழங்கினார்.