புது தில்லி: முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்.
கடந்த 2007ல் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டு நிதியை முறைகேடாகப் பெறுவதற்கு கார்த்தி சிதம்பரம் உதவியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்க தனது தந்தையின் செல்வாக்கைப் பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டு கமிஷன் பெற்றதாக கார்த்தி மீது குற்றம் சாட்டப் பட்டது.
இதுதொடர்பான வழக்கில், கார்த்தி சிதம்பரம் சென்னை விமான நிலையத்தில் சிபிஐயால் கைது செய்யப்பட்டார். அவரை மார்ச் 24-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதை அடுத்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் கார்த்தி சிதம்பரம், தனக்கு ஜாமீன் கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமை இன்று நடைபெற்றது. கார்த்திக்கு நீதிமன்றக் காவல் நாளை நிறைவடைய உள்ள நிலையில், இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. பிணைத் தொகையாக ரூ.10 லட்சம் செலுத்தவும், பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவும், வங்கிக் கணக்குகளை மூட தடை விதித்தும் தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு ஜாமீன் வழங்கியது.