புது தில்லி: காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க ஒப்புதல் அளித்த அரசு, தற்போது ஆணையம் அமைப்பது குறித்த அறிவிப்பை அரசிதழில் வெளியிட்டுள்ளது. மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி இந்த அறிவிப்பில் கையெழுத்திட்டுள்ளார். ஆணையத்தின் தற்காலிக தலைவராக மத்திய நீர் வளத்துறைச் செயலர் யு.பி.சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் தமிழகத்தின் அரை நூற்றாண்டுக் கோரிக்கை பாஜக.,வைச் சேர்ந்த பிரதமர் மோடியின் காலத்தில் நிறைவேற்றப் பட்டிருக்கிறது.
தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு இடையே காவிரி நீரைப் பகிர்ந்து கொள்வதில் ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வு காண வேண்டும் என்று கோரி, இதற்கென தனி அமைப்பாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று தமிழகத்தின் சார்பில் மத்திய அரசிடம் வெகுகாலமாகவே கோரிக்கைகள் வைக்கப் பட்டு வந்தன. தமிழகத்தின் இந்தக் கோரிக்கைக்கு கர்நாடக மாநிலம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு காவிரி நீர் பங்கீடு தொடர்பாக பிப்., 16ஆம் தேதி ஓர் உத்தரவு பிறப்பித்தது. இதன்படி ஒவ்வோர் ஆண்டும் காவிரியில் இருந்து, 177.25 டி.எம்.சி., தண்ணீரை கர்நாடக அரசு, தமிழகத்துக்குத் திறந்து விட வேண்டும். இந்தப் பங்கீட்டை முறையாக அமல்படுத்த அதிகாரம் பெற்ற ஓர் அமைப்பை உருவாக்க, ஒரு வரைவு செயல் திட்டத்தை அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.
சில இழுபறிகளுக்குப் பின் இந்த வரைவு செயல் திட்டத்தை மத்திய நீர் வளத்துறை செயலர் யு.பி.சிங் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். பின்னர், அதில் சில திருத்தங்களைக் கூறிய உச்ச நீதிமன்றம், திருத்தப்பட்ட வரைவு செயல் திட்டத்தை சமர்ப்பிக்க உத்தரவிட்டது. அதன் பின்னர், திருத்தப்பட்ட செயல் திட்டத்தை, மத்திய அரசு தாக்கல் செய்தது. அதில் ‘மேலாண்மை வாரியம்’ என்பதற்கு பதிலாக, ‘மேலாண்மை ஆணையம்’ என்ற பெயரில் 10 உறுப்பினர்கள் அடங்கிய குழு செயல்படும் என்றும், நீர் பங்கீடு தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் மேலாண்மை ஆணையத்திடமே இருக்கும் என்றும் கூறப்பட்டது. மேலும், இந்த மேலாண்மை ஆணையத்தின் தலைமையகம் தில்லியில் செயல்படும் என மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வரைவு செயல் திட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி 10 உறுப்பினர்கள் அடங்கிய காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்து, தென்மேற்குப் பருவ மழை துவங்கும் முன் இது குறித்த அறிவிப்பை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியது. அதன்படி, காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கான அறிவிப்பு நேற்று வெளியானது. மத்திய நீர்வளத்துறை சார்பில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கையெழுத்திட்டுள்ளார். இந்த அறிவிப்பு அரசிதழிலும் (கெஜட்டிலும்) நேற்று வெளியிடப்பட்டது.
இதன்படி, ஆணையத்தின் தற்காலிக தலைவராக மத்திய நீர்வளத்துறை செயலர் யு.பி.சிங் செயல்படுவார்; நிரந்தர தலைவர் விரைவில் நியமிக்கப்படுவார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் குறித்த அறிவிப்பு அதிகார பூர்வமாக வெளியானதை அடுத்து தமிழகத்தின் நீண்ட கால உரிமை, சட்டப் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது, அதுவும் மோடியின் ஆட்சிக் காலத்தில்! மத்திய மோடி அரசின் இந்த நடவடிக்கையால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.