புது தில்லி: தேர்தல் ஆலோசகர், வியூக நிபுணர், வெற்றிக்கான சூத்திரதாரர் என்றெல்லாம் கூறப்படும் பிரசாந்த் கிஷோர், 2019 தேர்தலுக்காக இப்போது மீண்டும் பாஜக., பக்கம் நெருங்கி வருவதாகக் கூறப் படுகிறது.
தேர்தல் வியூகங்களை வகுத்து வெற்றிகரமான முடிவுகளுக்காக பெயர் பெற்ற நிபுணர் பிரசாந்த் கிஷோர். இவர், தனது ஸ்ட்ராடஜிக் திட்டமிடல் நிறுவனம் மூலம் அரசியல் கட்சிகள், தேர்தல்களில் வெற்றி பெறும் வகையில் திட்டங்களை வகுத்துக் கொடுப்பார். மேலும் பிரசாரத்தை ஒருங்கிணைப்பதில் வல்லவர் என பெயர் பெற்றவர்.
கடந்த 2012ஆம் ஆண்டு குஜராத் சட்டசபைத் தேர்தலிலும், அடுத்து வந்த 2014 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலிலும் பாஜக.,வுடன் கை கோத்து பணி செய்தார். அப்போது, நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க, ஆட்சியைப் பிடிக்க கிஷோர் திட்டங்களை வகுத்துக் கொடுத்தார். ஆனால் அதன் பின்னர் பாஜக.,வில் பெரும் பதவியை எதிர்பார்த்தார் கிஷோர். அது, அமித் ஷாவுக்குப் பிடிக்கவில்லை. இதனால் கிஷோருக்கும் அமித் ஷாவுக்கும் இடையில் கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டன. இதனால் அமித் ஷாவை விட்டுப் பிரிந்த கிஷோர், பின்னர் பீஹார் சட்டசபைத் தேர்தலில், நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், லாலுவின் ரா.ஜ.த இன்னும் சில கட்சிகளை இணைத்து ஏற்பட்ட மெகா கூட்டணிக்காக பணியாற்றி வெற்றியை தேடிக் கொடுத்தார்.
அடுத்து பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸுக்காக பணியாற்றினார். ஆனால் உ.பி. தேர்தலின் போது இவரது திட்டமிடல் செயல்படவில்லை. அதற்குக் காரணமாக, காங்கிரஸ் தலைவர்களிடையே ஒற்றுமை, ஒருங்கிணைப்பு இல்லை என்று கூறினார்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக பாஜக.,வின் மூத்த நிர்வாகிகள் மூலம் பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோரை சுமார் 20 முறை கிஷோர் சந்தித்ததாகவும், 2019 பொதுத் தேர்தலை சந்திக்க தயாராவதற்கான திட்டங்களை செயல்படுத்துவது குறித்து நீண்ட ஆலோசனைகளை நடத்தியதாகவும் பாஜக., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால் மீண்டும் கிஷோர், மோடி, அமித் ஷா மூவரின் கூட்டணியில் வரும் நாடாளுமன்றத் தேர்தலை பாஜக., சந்திக்கும் என்று அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.