மும்பை தாக்குதல் சம்பவத்தின் 10ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நினைவிடத்தில் இன்று ஆளுநர் மற்றும் முதல்வர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ஆம் தேதி கடல் வழியாக ஊடுருவி திடீர் தாக்குதல் நடத்தினர். 29-ஆம் தேதி வரை பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்கள் உள்ளிட்ட 166 பேர் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதல்களில் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட 9 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். உயிருடன் பிடிபட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப் 2012ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டான்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தின் 10ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப் படுகிறது. இதையொட்டி மும்பை போலீஸ் ஜிம்கானா பகுதியில் உள்ள நினைவிடத்தில் இன்று அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
மும்பை தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மகாராஷ்டிர மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், பல்வேறு அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.