திருவனந்தபுரம் : சபரிமலை நிலைப்பாட்டுக்காக கேரளாவில் அரசு நடத்த உத்தேசித்துள்ள ‘மகளிர் சுவர்’ நிகழ்ச்சியில் பங்கேற்பதாக அறிவித்த சில மணி நேரங்களில் அந்த அறிவிப்பை வாபஸ் பெற்றுக் கொண்டார் மலையாள நடிகை மஞ்சு வாரியர்! அதற்கு அவர் கூறிய காரணம், அரசியல்!
சபரிமலை விவகாரத்தில் மக்களிடம் ஆதரவு திரட்ட ஜனவரி 1ஆம் தேதி காசர்கோடு முதல் திருவனந்தபுரம் வரை 600 கி.மீ., நீளத்திற்கு பெண்களை வரிசையாக நிறுத்தி ‘மகளிர் சுவர்’ அமைக்கப்படும் என கேரள முதல்வர் பிணராயி விஜயன் அறிவித்திருந்தார்.
இந்த ‘மகளிர் சுவர்’ நிகழ்வில் பங்கேற்க உள்ளதாக பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் அறிவித்திருந்தார். ஆனால் தாம் அறிவித்த சில மணி நேரங்களிலேயே தனது அறிவிப்பை அவர் வாபஸ் பெற்றார். இந்த நிகழ்ச்சி அரசியல் கலப்பு உள்ளதாகத் தெரிவதால், அதில் பங்கேற்க தான் விரும்பவில்லை என்று மஞ்சு வாரியர் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து மஞ்சு வாரியர் விளக்கம் அளித்த போது, நான் எப்போதுமே அரசின் நிகழ்ச்சிகளுக்கு ஆதரவு அளித்திருக்கிறேன். அதை நான் எதிர்காலத்திலும் தொடர்வேன். மகளிருக்காகவும் மகளிர் உரிமைக்காகவும் நான் இந்த மகளிர் சுவர் நிகழ்ச்சியில் பங்கேற்கப் போவதாகக் கூறினேன். ஆனால், இது எனது இந்த அறிவிப்பு ஒரு அரசியல் விவாதத்துக்கு இட்டுச் செல்லும் என நான் எதிர்பார்க்கவில்லை. கலை தான் என் அரசியல். அரசியல் கட்சிகளிடம் இருந்து நான் ஒதுங்கியிருக்கவே விருப்பப் படுகிறேன்… என்று கூறியுள்ளார்.
மகளிர் சுவர் – நிகழ்வு, சபரிமலை விவகாரத்தில் அரசின் மதசார்பற்ற தன்மையை வெளிப்படுத்தவும், ஆதரவு திரட்டவும் கேரள கம்யூனிஸ அரசால் நடத்தப் படுகிறது. அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்ற கேரள கம்யூனிஸ அரசின் கொள்கையைப் பிரசாரம் செய்யும் இயக்கமாக இந்த மகளிர் சுவர் நிகழ்ச்சி அமைந்துள்ளதால், இதில் கலந்து கொள்வதில் பிரபலங்கள் பலர் தயக்கம் காட்டி வருகின்றனர். இப்போது மஞ்சு வாரியரின் அறிவிப்பு, அடுத்த விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.