பெங்களூர் கண்டோன்மெண்ட் அருகில் தெருவோரத்தில் இறந்து கிடந்த பிச்சைக்காரர் தனது செயற்கை காலில் ரூ. 96 ஆயிரம் மறைத்து வைத்திருந்தது தெரியவந்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள கண்டோன்மெண்ட் ரயில் நிலையம் பகுதியில் சில வருடங்களாக 75 வயது மதிக்கத்தக்க முதியவர் ஷரீப் பிச்சை எடுத்து வந்தார். சாலையோரத்தில் உண்டு, உறங்கி வாழ்ந்து வந்தார் ஷரீப் சாப்.
கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று முன் தினம் மரணம் அடைந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வந்து அவரது உடலை அப்புறப்படுத்தினார். அப்போது, அவர் பொருத்தியிருந்த செயற்கைக் கால் மிகவும் கனமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீஸார், அதனை சோதனையிட்டனர். அதில், கிட்டத்தட்ட ரூ. 1 லட்சம் அளவுக்கு பணம் இருந்துள்ளது. ரூபாய் நோட்டுகளும், சில்லரைகளுமாக, 500,200,100,50,20,10 நோட்டுகள் என ரூ.96 ஆயிரம் இருந்தது தெரியவந்தது.
திருட்டு பயம் காரணமாக பணத்தை தனது செயற்கைக் காலில் மறைத்து வைத்திருக்கலாம் எனத் தெரிகிறது.
போலீஸார் இது குறித்துக் கூறியபோது, 500 ரூபாய் நோட்டுகள் 42, 100 ரூபாய் நோட்டுகள் 470, ரூ.200 நோட்டுகள் 20, ரூ.50 நோட்டுகள் 250, ரூ. 20 நோட்டுகள் 430, ரூ. 10 நோட்டுகள் 528 மற்றும் நாணயங்கள் சில என மொத்தம் அவரிடம் ரூ.96,760 இருந்தது. சில வருடங்களுக்கு முன்னர் அவரது கால் அழுகவே, ஒரு கால் எடுக்கப் பட்டு, அதில் செயற்கைக் கால் ஒன்று பொருத்தப் பட்டது. ஷரீப்பின் சகோதரி ஹைதராபாத்தில் இருக்கிறார் என்ற தகவல் தெரியவந்ததும், அவருக்கு ஷரீப்பின் இறப்பு குறித்து தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது என்றனர்.
Hard earned money