மும்பை: வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதத்தை 0.25% குறைத்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன் மூலம் வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி ஆளுநராக சக்திகாந்த தாஸ் பதவியேற்றவுடனேயே இந்த அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது.
சக்தி காந்த தாஸ் பொறுப்பேற்றதும், ரிசர்வ் வங்கியின் முதல் நிதிக் கொள்கைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதம் ரெப்போ 6.5%ல் இருந்து 6.25% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது என்றார்.
இதன் மூலம் வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும் என எதிர்பார்க்கப் படுகிறது.
மேலும், பிணையில்லா விவசாயக் கடன் வரம்பை ரூ. 1 லட்சத்தில் இருந்து ரூ.1லட்சத்து 60 ஆயிரம் ரூபாயாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
2019 – 20-ஆம் நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 7.4 சதவீதமாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார். பணவீ க்க விகிதம் ஆண்டின் முதல் பாதியில் 3.2 சதவீதத்தில் இருந்து 3.4 சதவீதமாகவும், 3-வது காலாண்டில் 3.9 சதவீதமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.