ஜெய் ஸ்ரீராம் என்று அடிக்கடி கூறும் பாஜக.,வினர் ஒரு ராமர் கோவிலாவது கட்டியிருக்கிறார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் மேற்கு வங்க முதல்வா் மம்தா பானர்ஜி! அவர் பிரதமர் மோடியை நோக்கி இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு, தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார் முதல்வர் மம்தா பானர்ஜி.
அப்போது, பிஷ்னுபுா் என்ற இடத்தில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசியபோது, பாஜக.,வினா் கூற விரும்பும் கோஷங்களை எல்லாம் மற்றவர்களும் முழங்க வேண்டும் என எதிர்பார்க்கக்கூடாது. ராமரை நாங்கள் மதிக்கிறோம். அவருக்கு எப்படி மரியாதை கொடுப்பது என்பது எங்களுக்கு தெரியும்.
ஜெய் ஸ்ரீராம் என்று கூறும் பாஜக.,வினர் தங்களது ஆட்சிக் காலத்தில் ஒரு ராமா் கோயிலாவது கட்டியதுண்டா?. தேர்தல் வரும் போதெல்லாம் ராமர் பாஜக.,வின் ஏஜெண்ட் ஆகி விடுகிறார் என்று பேசினார் மம்தா பானர்ஜி.
ரசகுல்லா, குர்தாவை வைத்து நடந்த அரசியலுக்குப் பின்னர், அண்மையில் ஜெய்ஸ்ரீராம் கோஷமும் அரசியலாகிவிட்டது மேற்கு வங்கத்தில்.
மம்தா பானர்ஜி பாதுகாப்பு வாகனம் புடைசூழ சென்றபோது ஜெய் ஸ்ரீராம் என்று இளைஞர்கள் சிலர் முழக்கம் செய்தனர். அதைக் கேட்டு கடுப்பான மம்தா பானர்ஜி, காரை நிறுத்தி, அந்த இளைஞர்களை திட்டினார்.
தொடர்ந்து, முதல்வர் முன்னர் ஜெய்ஸ்ரீராம் என முழக்கமிட்டதற்காக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதை அடுத்து, ஜாக்ராம் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமா் மோடி, ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிடுபவர்களை கைது செய்து சிறையில் அடைத்து வருகிறார் மம்தா
இதோ நானும் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிடுகிறேன்; முடிந்தால் என்னையும் கைது செய்து சிறையில் அடைக்கட்டும் என்று பேசினார். இதற்கு பதில் கூறும் விதத்தில், மம்தா ராமர் கோயிலை இழுத்துள்ளார்.