திருச்சூரில் புகழ்பெற்ற பூரம் விழா கோலாகலத் தொடங்கியுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூரில் புகழ்பெற்ற பூரம் திருவிழா கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. அதன் முன்னோட்டமாக அங்கு வாண வேடிக்கை நிகழ்ச்சிக்கான ஒத்திகை நடைபெற்றது.
கேரள மாநிலம் திருச்சூரில் ஞாயிற்றுக் கிழமை இன்று பூரம் விழா நடைபெறுகிறது. இவ்விழாவில், கடந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் ராமச்சந்திரன் யானைக்கு மதம் பிடித்து, இரண்டு பேரை மிதித்துக் கொன்றதால் இந்த ஆண்டு பூரம் திருவிழாவில் ராமச்சந்திரன் யானை கலந்து கொள்ள அரசு நிர்வாகம் தடை விதித்தது.
ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து யானை உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, கேரள தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், அரசுத் தரப்பில் அவர்களுடன் பேச்சு நடத்தினார்.
பேச்சுவார்த்தை முடிவில் யானை ராமச்சந்திரன் செல்லும் பாதையில் பத்து மீட்டர் தூரத்திற்கு தடுப்புகள் அமைக்கப்பட்டு, பூரம் விழாவின் தொடக்கத்தில், ஒரு மணி நேரம் மட்டும் யானைகளின் அலங்கார அணிவகுப்பை ராமச்சந்திரன் யானை தலைமை தாங்கிச் செல்லும் என்று முடிவு செய்யப்பட்டது.
இதனால் யானை உரிமையாளர்கள் சமாதானம் அடைந்து யானைகளை பங்கேற்கச் செய்ய சம்மதம் தெரிவித்தனர். இதை அடுத்து வழக்கமான உற்சாகத்துடன் பூரம் திருவிழா தொடங்கியுள்ளது.