ஆந்திராவில் முதல்வராக பதவியேற்க உள்ள ஜெகன் மோகனின் அறிவிப்பிற்கு ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்
ஆந்திரத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் மதுவிலக்கை நடைமுறைப் படுத்துவேன். இல்லாவிட்டால் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்ற ஜகன்மோகன் ரெட்டியின் அறிவிப்பு பாராட்டத்தக்கது. துணிச்சலானது. மது இல்லாத தென்னகம் அமைய ஆந்திரம் வழி வகுக்கட்டும்! என்று பாமக நிறுவனர் ராமதாஸ் ஜெகன்மோகன் ரெட்டிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்
முன்னதாக ஆந்திராவில் முழு மதுவிலக்கை அமல்படுத்தும் நடவடிக்கையை, ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆந்திராவின் புதிய முதல்வராக பதவியேற்க உள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி. இவர், ஓராண்டுக்குள் ஆந்திராவை முன்னணி மாநிலமாக மாற்ற உறுதி பூண்டுள்ளார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் அம்மாநிலத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த திட்டமிட்டுள்ளார். இதற்காக தனியார் தொண்டு நிறுவனத்திடம் திட்ட அறிக்கை கேட்டுள்ளார்.
இதனால், நடப்பு ஆண்டிலேயே அம்மாநிலத்தின் மது கொள்கை மாற்றி அமைக்கப்படும் என்று தெரிகிறது.
முழு மதுவிலக்கு இலக்கை எட்டும் வரை ஒவ்வொரு ஆண்டும் கொள்கை மாற்றி அமைக்கப்படவுள்ளது.
ஐந்து நட்சத்திர விடுதிகளுக்கு மட்டும் குறிப்பிட்ட அளவில் மது விநியோகிக்க அனுமதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.
கடைகளை குறைப்பது, விலையை அதிகரிப்பது போன்ற அம்சங்களும் புதிய கொள்கையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, குஜராத், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் முழு மதுவிலக்கு அமலில் உள்ளது.