புது தில்லி: உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குறித்து கேவலமாகவும் இழிவுபடுத்தியும் சர்ச்சைக்குரிய விதத்தில் சமூக வலைதளத்தில் பதிவிட்டதற்காக கைது செய்யப் பட்ட பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜ்யாவை உடனடியாக ஜாமீனில் விடுவிக்க உத்தரப் பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், தனி நபர் தாக்குதலாக சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டதாக கனோஜ்யா, கடந்த வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். டிவிட்டரில் அவர் வெளியிட்ட வீடியோவில், பெண் ஒருவர் முதலமைச்சர் அலுவலகத்திற்கு முன் நின்று கொண்டு, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வீடியோ காலிங் மூலம் பேசினார், அவரை திருமணம் செய்து கொள்ள விரும்பினேன் என்று தனிநபர் களங்கப்படுத்தும் விதமாக பேசுவதை வெளியிட்டு, நாங்கள் உங்களுக்கு திருமணம் செய்து வைக்கிறோம் என்ற ரீதியில் கருத்து தெரிவித்திருந்தார்.
இதை அடுத்து இந்த வீடியோவை வெளியிட்ட செய்தி தொலைக்காட்சியின் தலைவரும், மற்றொரு தனியார் செய்தி தொலைக்காட்சியின் எடிட்டரும் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். பிறகு முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டு, மேலும் 4 பேர் இது தொடர்பாக கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜ்யாவை 11 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரப் பிரதேச நீதிமன்றம், மாநில போலீசாருக்கு அனுமதி அளித்தது. இதனை எதிர்த்து பிரசாந்த் கன்னோஜ்யாவின் மனைவி சார்பில் தொடரப்பட்ட வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், இது, தனிநபர் சுதந்திரத்தை மறுக்கும் செயல் எனத் தெரிவித்தது. கனோஜ்யாவின் டிவிட்களை ஏற்றுக் கொள்ளவில்லை என்று தெரிவித்த நீதிபதிகள், அதற்காக அவர் மீது எடுக்கப் பட்ட நடவடிக்கையும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்று கூறி, அவரை உடனடியாக ஜாமீனில் விடுதலை செய்ய மாநில போலீசாருக்கு உத்தரவிட்டனர். மேலும், பிரசாந்த் கனோஜ்யா மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்றும் கூறினர்.