தில்லியில் வரும் 15 ஆம் தேதி நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தில்லி செல்கிறார். அப்போது பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து பேசுவார் என்று கூறப் படுகிறது.
இரண்டாவது முறையாக பாஜக., அரசு பதவி ஏற்ற பின்னர், முதல் நிதி ஆயோக் கூட்டம் வரும் ஜூன் 15ம் தேதி பிரதமர் மோதி தலைமையில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில்அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. கூட்டம் முடிந்த பின்னர் இரவு அனைத்து மாநில முதல்வர்களுக்கும், பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்து அளிக்கிறார்.
நிதி ஆயோக்கின் முதல் கூட்டத்தில் கலந்து கொள்ள தில்லி செல்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. நாளை தில்லி செல்லும் அவருடன் தலைமைச் செயலாளர் மற்றும் முக்கிய அதிகாரிகளும் செல்கின்றனர். நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்ன்னர் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட முக்கிய மத்திய அமைச்சர்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்துப் பேசுவார் என்று கூறப் படுகிறது.
மாறி வரும் அரசியல் சூழல், தமிழக அரசியல் கள நிலவரம், தமிழக திட்டங்களுக்குத் தேவையான நிதியைப் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் பேசக்கூடும்.