மெகா ஸ்டார் சிரஞ்சீவி பிஜேபியில் சேரப்போகிறார் என்று தகவல்கள் இப்போது உலா வருகின்றன. அவர், பாஜக., முக்கியத் தலைவர்களை விரைவில் சந்திக்க உள்ளார் என்று கூறப் படுகிறது.
பிரஜா ராஜ்யம் கட்சியைத் தொடங்கி பின்னர் காங்கிரஸுடன் தன் கட்சியைக் கலந்து, காங்கிரஸில் கரைந்து, மாநிலங்களவைக்கு தேர்வாகி, தொடர்ந்து மத்திய சுற்றுலா அமைச்சராகவும் இருந்த மெகா ஸ்டார் சிரஞ்சீவி, இப்போது காவித் துண்டு அணியத் தயாராகியிருக்கிறார் என்கிறார்கள்.
அப்படியா என்று ஆச்சரியமாகக் கேட்பவர்களுக்கு, ஆமாம் என்றே அவர் குறித்த அண்மைய குறிப்புகள் சுட்டிக் காட்டுகின்றன.
தெலுங்கு மாநிலங்களில் ஆபரேஷன் கமலம் என்ற பெயரில் முக்கிய தலைவர்களுக்கு காவித் துண்டு அணிவித்து கட்சியை பலப்படுத்தி வருகிறது பாஜக.,! அனைத்து சமூகத்தினரையும், அனைத்து பிரிவு மக்களையும் கட்சியில் சேர்ப்பதை லட்சியமாகக் கொண்டு காய் நகர்த்தி வருகிறது பாஜக., என்கிறார்கள்.
காப்பு இனத் தலைவர்களுள் ஒருவரான சிரஞ்சீவி காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து இருந்து வந்தாலும் கடந்த தேர்தலில் பிரசாரத்தில் ஈடுபடவில்லை. கடந்த ஏப்ரல் மாதத்துடன் சிரஞ்சீவியின் மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் முடிந்து போனது.
இவை எல்லாம் ஒரு புறம் இருந்தாலும், கடந்த சில நாட்களாக திரைப்படங்கள் மீது கவனம் செலுத்திவரும் சிரஞ்சீவி “சைரா நரசிம்ஹாரெட்டி” பட ஷூட்டிங்கில் பிஸியாக உள்ளார்.