தேசிய புலனாய்வு அமைப்பு – என்.ஐ.ஏ.,வின் அதிகாரம் தொடர்பான சட்டத் திருத்த மசோதா மீது விவாதம் இன்று நாடாளுமன்ற மக்களவையில் நடந்தது. தேசிய நலன் தொடர்பான மசோதாவுக்கு எம்பி.,க்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த விவாதத்தின் போது வேண்டுகோள் விடுத்தார்.
அப்போது பேசிய அவர், மசோதா நாட்டின் நலன் தொடர்பானது. வளர்ந்து வரும் தேச விரோத பயங்கரவாதிகளை கட்டுப் படுத்த தேசியப் புலனாய்வு அமைப்பின் அதிகாரம் சீர்திருத்தப்பட வேண்டியது அவசியமாகிறது. நேற்றுகூட தேசிய மாநாட்டுக் கட்சி நிர்வாகி செய்யது தாக்கீர் கொல்லப்பட்டுள்ளார். இது போன்ற பயங்கரவாத செயல்கள் வேரோடு களையப்பட கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
இந்தச் சட்டம் தவறாக பயன்படுத்தப் பட மாட்டாது. பயங்கரவாதத்தில் எந்த பயங்கரவாதி எந்த மதம் என்று பார்ப்பதற்கில்லை. இந்தச் சட்டம் யாரையும் குறி வைத்தோ யாரையும் காயப்படுத்தும் விதத்திலோ பயன்படுத்தப் படாது… என்று பேசினார். இதை அடுத்து இந்த மசோதாவுக்கு 278 உறுப்பினர்கள் ஆதரவளித்தனர். தொடர்ந்து மசோதா நிறைவேற்றப் பட்டது. இருப்பினும், போலீஸ் அதிகாரம் கொண்டதாக நாட்டை மாற்ற பாஜக., முயல்வதாக காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது.