காஷ்மீர் விவகாரத்தை முன்னிட்டு இந்திய பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் அரசு அந்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தூதரக உறவுகளை முதலில் முறித்துக் கொண்டது.
மேலும் இந்தியாவுடனான தொடர்புகளை படிப்படியாகக் குறைத்துக் கொள்வதாக அறிவித்தது. அத்துடன் வர்த்தக ரீதியாக இந்தியாவுடன் உறவுகளை முறித்துக் கொள்ளப் போவதாகவும் அறிவித்து, வாகா எல்லையை மூடியது.
மேலும், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இயங்கி வந்த சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் ரயில் (நல்லெண்ண விரைவு ரயில்) மற்றும் தார் எக்ஸ்பிரஸ் ரயில்களை தற்காலிகமாக நிறுத்தியது. தங்கள் நாட்டு எல்லைக்குள் இந்த ரயில்களை அனுமதிக்கப் போவதில்லை என்று திடீரென அறிவித்தது.
இதனால் அந்த ரயிலில் இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்த மற்றும் பாகிஸ்தானுக்குள் சென்று கொண்டிருந்த பயணிகள் பெரும் பாதிப்பை சந்தித்தனர். தொடர்ந்து இந்திய தரப்பில் உடனடி மாற்று நடவடிக்கை எடுக்கப் பட்டு, பயணிகள் பத்திரமாக அழைத்து வரப் பட்டனர்.
இந்நிலையில், ஆக.11 ஞாயிற்றுக் கிழமை இன்று இந்திய அரசு தில்லி மற்றும் அடாரி வழியாக லாஹூர் ரயில் நிலையத்துக்கு சென்று கொண்டிருந்த சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இது பாகிஸ்தான் மேற்கொண்ட தற்காலிக நிறுத்த நடவடிக்கையைத் தொடர்ந்து மேற்கொள்ளப் படுவதாக இந்திய தரப்பு தெரிவித்துள்ளது.
Northern Railway’s Chief Public Relations Officer (CPRO): Inconsequent to Pakistan’s decision to cancel Samjhauta Express 14607/14608 running between Lahore and Attari, the Samjhauta Link Express train number 14001/14002 running between Delhi and Attari also stands cancelled pic.twitter.com/frtB4htbg5
— ANI (@ANI) August 11, 2019