தமிழகத்தில் பேனர் கலாசாரத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டமாகக் கிளம்பியிருக்கிறார் கமல்ஹாசன்.
சென்னை பள்ளிக் கரணையில் கடந்த வாரம், சுபஸ்ரீ என்ற இளம் பெண் தன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அதிமுக.,வைச் சேர்ந்த பிரமுகர் ஒருவரின் இல்லத் திருமணத்துக்காக வரவேற்பு பேனர்களை சாலை நடுவில் கட்டியிருந்தார்கள். அப்போது திடீரென காற்று அடித்து, பேனர் சுபஸ்ரீயின் மீது விழுந்தது. இதனால் நிலை தடுமாறிய அந்தப் பெண் சாலையில் விழ, பின்னே வந்த லாரி மோதி உயிரிழந்தார் சுபஸ்ரீ.
இந்தச் சம்பவம் தமிழகம் எங்கும் சோகமான சூழலை ஏற்படுத்தியது. பலரும் பேனர் கலாசாரத்துக்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர். அவர்களின் கோப வார்த்தைகளால், அரசியல் கட்சியினர் பலரும் தங்கள் தரப்பில் பேனர் வைக்க மாட்டோம் என்று உறுதி கொடுத்தனர்.
பேனர்கள் குறித்து கண்காணிக்கவும் அகற்ற நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் முன் நின்றது. இதனால் சினிமாத்துறை பிரபலங்களும் கூட தங்கள் படத்துக்காக பேனர்கள் வைக்க வேண்டாம் என்று ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், பேனர் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும். இல்லையேல் மக்களே அதனை ஒழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். என்றும் மக்களுடன் மக்கள் நீதி மய்யமும் துணை நிற்கும் என்றும் கமல்ஹாசன் பேசினார். அத்துடன் சுபஸ்ரீயின் குடும்பத்தைச் சந்தித்து ஆறுதலும் கூறினார்.
தற்போது மக்கள் நீதி மய்யத்தின் பேனர்கள் குறித்து சமூகத் தளங்களில் கருத்துகள் அதிகம் உலா வருகின்றனர். அதில், மக்கள் நீதிமய்ய பேனருடன், விமர்சனங்களும் முன்வைக்கப் பட்டு வருகிறது!
(புகைப்படம் : பேனர் கலாச்சாரத்தை மக்கள் நீதி மய்யம் ஒழித்த போது…)