நவராத்திரி திருவிழா என்பது, சக்தி உபாசனையின் முக்கிய நாட்கள். ஒன்பது நாட்களும் அன்னை பராசக்தியை மூன்று வடிவங்களில் வழிபடுவது வழக்கம். குறிப்பாக, மேற்கு வங்கம், சக்தி வழிபாட்டில் முக்கிய மாநிலமாகத் திகழ்கிறது.
தமிழில் தேசியக் கவி பாரதி, யாதுமாகி நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய் என்று பாடினார். மேற்கு வங்கத்தில் ஆன்மிகப் புரட்சி செய்த ஸ்ரீராமகிருஷ்ணர், பண்டைய தமிழக மண்ணில் தோன்றிய ஆதிசங்கரர் என பலரும் சக்தி உபாசகர்களாகத் திகழ்ந்தனர்.
சக்தி வழிபாடு என்பது இந்துக்களின் ஆன்மிக மரபில் ஓர் அங்கமாக, அம்சமாகத் திகழ்கிறது. சக்தி இல்லையேல் சிவமில்லை சிவமில்லையேல் சக்தி இல்லை என்ற தத்துவத்தை தன்னில் நிறைத்த சமுதாயம் இது. சிவபெருமான் தன்னில் பாதியை சக்திக்கு வழங்கி அர்த்தநாரீஸ்வரராகக் காட்சி அளித்தார். மனித வாழ்க்கையில் ஆணும் பெண்ணும் சரி பாதி எனும் தத்துவத்தையும், பெண் இல்லாமல் ஆணின் வாழ்க்கை நிறைவை அடையாது எனும் சூட்சுமத்தையும் உணர்த்துவது இது.
ஆண் தெய்வங்களும் பெண் தெய்வங்களும் இந்து மத வழிபாட்டில், இயல்பான வாழ்க்கையை மனித குலத்துக்கு எடுத்துக் காட்டுவது. பெண் இல்லாமல் செய்யும் சடங்குகள் முழுமை பெறாது என்பதால், ஆன்மிகச் சடங்குகளுக்கு பெண்களையும் உடன் இருத்தி வைத்தது இந்து தர்மம்.
அந்தத் தத்துவங்களில் அடிப்படையில், ஆண் தெய்வங்களுக்கு தனித்தனி வழிபாட்டு நாட்கள் இருப்பது போல், பெண் தெய்வங்களான சக்தி தேவியருக்கு இந்த நவராத்திரி வழிபாடு அமைகிறது. இந்த வழிபாட்டு நாட்களில், ஒன்பது தினங்களில் துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி என்ற முப்பெரும் தேவியரை வழிபடுவது மரபு.
மகாளய அமாவாசை நாளான இன்று நள்ளிரவு முதல் நவராத்திரி தொடங்குகிறது. துர்கா பூஜை அக்டோபர் 3ம் தேதியும், சரஸ்வதி பூஜை 7ம் தேதியும், விஜயதசமி 8ம் தேதியும் கொண்டாடப்படுகிறது.
வடமாநிலங்களில் உள்ள கோவில்களில் நவராத்திரி கொண்டாட்டங்கள் களை கட்டத் தொடங்கியுள்ளன. ஆந்திரம், கர்நாடகம், தெலங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் தசரா திருவிழா நிகழ்ச்சிகள் தொடங்கிவிட்டன. இந்தத் திருவிழாவின் போது, கர்நாடக மாநிலம் மைசூரு திருவிழாக் கோலம் காண்கிறது. மைசூரு தசரா திருவிழா உலகப் புகழ்பெற்ற ஒன்று! இந்தத் திருவிழாக்களின் போது, மக்கள் டாண்டியா, கார்பா நடனங்கள் ஆடியும் சிறப்பு பூஜைகள் செய்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.
இன்று நள்ளிரவு முதல் நவராத்திரி கொண்டாட்டம் நாடு முழுவதும் களை கட்டத் தொடங்கும்.
சென்னையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழாவுக்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மயிலாப்பூர் பகுதிகளில் கொலு பொம்மைகள் கண்காட்சி, கொலு பொம்மைகள் விற்பனை களை கட்டியுள்ளது.