சீன அதிபர் ஜி ஜின்பிங்குடனான முறைசாரா சந்திப்புக்கு தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தைத் தேர்வு செய்தார் பிரதமர் மோடி. அது முதல், தமிழகம், தமிழக வரலாறு, மன்னர்களின் வரலாறு, அவர்கள் செய்த அதிசயங்கள், பண்டைய தமிழக மன்னர்களுக்கும் சீனத்துக்கும் இருந்த வரலாற்றுத் தொடர்பு இவற்றை எல்லாம் குறிப்பிட்டு வந்தார்.
தொடர்ந்து, தமிழில் தனது டிவீட்களைப் பதிவு செய்து, தமிழகத்துக்கு தாம் வரப் போவது முதல் தெரிவித்தார். தமிழகம் விருந்தோம்பலில் சிறந்தது என்பதையும் தொடக்கத்திலேயே தெரிவித்தார். பின்னர் சீன அதிபருடனான சந்திப்புகளின் போது எடுக்கப் பட்ட புகைப்படங்களுடன் அவ்வப்போது தமிழில் எழுதி டிவிட்டர் பதிவிட்டார்.
குறிப்பாக, உலகத்தின் மிகப் பழைமையான மொழி தமிழ் என்று சீன அதிபருடனான பேச்சின் போது குறிப்பிட்டார். இவ்வாறு தமிழின் பழைமைச் சிறப்பை உலகத்தில் பலர் அறிய மோடி பேசுவது இது அண்மைக் காலத்தில் மூன்றாவது முறை.
பிரதமரின் மாமல்லபுரம் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையிலான டிவீட்களை, உலகம் முழுதும் உற்று நோக்கிக் கொண்டிருக்கும் டிவீட்களை அவ்வளவு எளிதில் நாமும் மறந்தோ கடந்தோ சென்று விட முடியாது. தமிழகத்தின் பாரம்பரியச் சிறப்பையும், தமிழ் மண்ணின் மன்னர்கள் நிகழ்த்திய அற்புதங்களையும் ஒரே நாடு என்றாலும், ஒரே நாட்டின் தென் பகுதியாக இருந்த போதிலும், இதுவரையிலும் வடநாடும் குறிப்பாக இந்திய நாடு முழுதுமே அறியாமலும் அங்கீகரிக்காமலும் இருந்து வந்தது.
ஆனால் பிரதமர் மோடி, தமிழுக்கும் தமிழ் மன்னர்களுக்கும் கொடுத்த தனித்துவத்தின் காரணத்தாலேயே, ராஜராஜ சோழனின் கப்பல் கட்டும் திறன் வடநாட்டில் வலுவாக்கப் பட்டது. தொடர்ந்து திருக்குறள், புறநானூறு உள்ளிட்ட பழந்தமிழ் நூல்களின் சிறப்பும் மேன்மையும் அவ்வப்போது வெளிப்படுத்தப் படுகிறது மோடியினால்!
இந்தச் சூழலில் உலகமே உற்று நோக்கிய ஜி ஜின்பிங்கின் இந்திய பயணத்தை மாமல்லபுரத்துக்கு மாற்றி, தாமும் தமிழ் மண்ணின் கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையில் வேட்டியில் வந்து தமிழ் உள்ளங்களைக் கொள்ளை கொண்டார்.
ஒரு குஜராத்தியான தேசப் பிதா மகாத்மா காந்தி, மதுரைக்கு வந்த போது, வேட்டி கட்டிய உழவர்களின் எளிமையைக் கண்டு, தாமும் தம் நாட்டின் குடியானவனைப் போல் மாற வேண்டும் என்று அதனைப் பிரதிபலித்தார். பின்னாளில் அதுவே அவரின் அடையாளம் ஆனது.
தற்போது, அமெரிக்க அதிபர் டிரம்பினால் இந்தியாவின் தேசப் பிதா என்று பட்டம் சூட்டப் பட்ட மோடி, தமிழர்களின் எளிமையான உடையான வேட்டி, மேல்துண்டு இவற்றை அங்கீகரித்து, அதனை வெளிப்படுத்தினார்.
பிரதமர் மோடியின் இந்த இரு தினங்களில் வெளிப்படுத்தப் பட்ட தமிழ் ட்வீட்கள்…
சென்னை வந்திறங்கியுள்ளேன்.
கலாசாரம் மற்றும் விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற மாபெரும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
சீன அதிபர் ஷி ஜின்பிங்கை தமிழ் நாடு உபசரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியா -சீனா இடையேயான உறவு இந்த முறைசாரா உச்சி மாநாட்டின் மூலம் மேலும் வலுப்பெறட்டும்.
அதிபர் ஷி ஜின்பிங் அவர்களே!, இந்தியாவிற்கு வருக வருக என்று வரவேற்கிறேன்.
மாமல்லபுரம், இந்தியாவின் பேரழகு வாய்ந்த இடங்களுள் ஒன்று. உயிர்த்துடிப்பு மிக்க ஊர். வாணிபம் மற்றும் ஆன்மிகத்துடன் தொடர்பு கொண்டிருந்த இடம். தற்போது உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.
@UNESCO பாரம்பரியத் தலங்களுள் ஒன்றான இந்தக் கவின் மிகு இடத்தை, அதிபர் ஷி ஜின்பிங்குடன் சுற்றிப் பார்த்து, நேரத்தை செலவிடுவதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
மாமல்லபுரத்தில் காணவேண்டிய பிரம்மாண்டமான இடங்களுள் ஒன்று அர்ஜூனன் தவம். இது மகாபாரதக்கால வாழ்க்கையை உயிர்ப்பித்துக் காட்டுகிறது. பல்லவர் காலத்துச் சிற்பக்கலையின் சிறப்பை, குறிப்பாக இயற்கையையும் விலங்குகளையும் அர்ஜூனன் தவம் காட்சிப்படுத்துகிறது.
அதிபர் ஷி ஜின்பிங்கும் நானும் அதி அற்புதமான ஐவர் ரதங்களைக் கண்டு களித்தோம்.
ஒற்றைக் கல்லில் செதுக்கப்பட்ட சிற்பங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்த ஐவர் ரதச் சிற்பங்கள்.
இந்த நினைவிடத்தில், தர்மராஜன் ரதம், பீமன் ரதம், அர்ஜூனன் ரதம், நகுலன்- சகாதேவன் ரதம் மற்றும் திரவுபதி ரதம் ஆகியவை உள்ளன.
வங்கக் கடலோரத்தில் அமைந்துள்ளது பிரமாண்டமான அலைவாய்க் கோவில். நமது அதி அற்புத அடையாளச் சின்னங்களுள் ஒன்றாக விளங்கும் இந்த அலைவாய்க் கோவில், இந்தியக் கலாச்சாரத்தின் பிரம்மாண்டத்தை ஈடு இணையற்ற முறையில் வெளிப்படுத்துகிறது.
அலைவாய்க் கோவிலில் இருந்து மேலும் சில படங்கள் இதோ.
மாமல்லபுரத்தில் அதிபர் ஷி ஜின்பிங்குடன் ஆலோசனைகள் தொடர்கின்றன. இந்திய – சீன உறவினை மேம்படுத்த ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
நமது இரண்டாவது முறைசாரா உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வந்தமைக்காக அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். #ChennaiConnect இந்தியா-சீன உறவுகளுக்கு மேலும் உந்து சக்தியை அளிக்கும். இது நமது நாட்டு மக்களுக்கும் உலகத்திற்கும் பலன் அளிக்கும்.
தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு நான் சிறப்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எப்போதும் போல், அவர்களது இதமான அன்பும், உபசரிப்பும் தனித்து நிற்கின்றன. ஆற்றல் மிக்க இந்த மாநிலத்தின் மக்களுடன் இருப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிப்பதாகும்.
மாமல்லபுரத்தில் நடைபெற்ற முறைசாரா உச்சி மாநாட்டை சிறப்புற நடத்துவதில் உறுதுணையாக இருந்த தமிழக அரசிற்கும் நன்றி.
அழகிய மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்திய- சீன முறை சாரா உச்சி மாநாட்டிற்கு உறுதுணை புரிந்து உபசரிப்பு நல்கிய அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சமூக கலாச்சார அமைப்புகளுக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.