உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப் பட்டுள்ளது. பிரிக்கப்பட்ட மற்றும் புதிதாக உருவாக்கப் பட்ட மொத்தமுள்ள 9 மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
முன்னதாக, 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை தள்ளி வைக்க தயாராக உள்ளதாகவும், மற்ற மாவட்டங்களில் தேர்தலை நடத்த தயார் எனவும், உச்ச நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் மனு தாக்கல் செய்துள்ளது.
இதனால் பிரிக்கப்பட்ட மற்றும் புதிதாக உருவாக்கப் பட்ட மொத்தமுள்ள 9 மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தேர்தலை நடத்தலாம் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்கு முன் வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு, சுழற்சிமுறை உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்தது. மேலும், தொகுதி மறுவரையறை பணிகள் நிறைவடையாததால் அறிவிக்கப்பட்ட கிராம ஊரக உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் எனவும் திமுக சார்பில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இன்று இந்த வழக்கு விசாரணையின்போது, திமுக சார்பில் தெரிவிக்கப் பட்ட கருத்தில், உள்ளாட்சித் தேர்தல் நடத்தப் பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம், அது நியாயமான முறையில் நடைபெறவேண்டும். ஆனால் வார்டு மறுவரையறை செய்யாமல் தேர்தல் நடத்தக் கூடாது என்று கூறப் பட்டது.
இதற்கு மாநில தேர்தல் ஆணையம், 2011ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கின்படி நடத்தப் படும் என்று பதிலளித்தது.
தமிழக அரசு சார்பில் முறையிட்டபோது, தொகுதி மறுவரையறை செய்யப்பட வில்லை என நீதிமன்றம் நினைத்தால் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் மட்டும் தேர்தலை தள்ளி வைக்கலாம். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டால் நீதிமன்றத்தால் தேர்தலை ரத்து செய்ய முடியாது என்றது தமிழக!
இதன் பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்… பிரிக்கப்பட்ட புதிய மாவட்டங்களில் மறுவரையறை பணிகள் முடியாத நிலையில் உள்ளாட்சி தேர்தலில் குழப்பம் வராதா. தேர்தலை நீதிமன்றத்தால் ரத்து செய்ய முடியாது! ஆனால் முறையான விதிகள் பின்பற்றவில்லை எனில் தேர்தலை தள்ளி வைக்க முடியும். இந்த வழக்கு தொடர்பாக மதியம் 2 மணிக்குள் மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த மனுவில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க தயாராக உள்ளோம். மற்ற மாவட்டங்களில் தேர்தலை நடத்த தயாராக உள்ளோம் எனக் கூறப் பட்டது. இதை அடுத்து, 9 மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தேர்தலை நடத்த நீதிபதிகள் அனுமதி அளித்து, தீர்ப்பை தள்ளி வைத்தனர்.
இந்த வழக்கு விசாரணையின் முக்கிய அம்சங்கள்:
9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்கலாம் – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்
புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் தொகுதி மறுவரையறை செய்தீர்களா? என்று நீதிபதிகள் கேள்வி
அதை செய்ய வேண்டியதில்லை என மாநில தேர்தல் ஆணையம் பதில்..
ஏன் – நீதிபதிகள்
வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருநெல்வேலி ஆகிய 4 மாவட்டங்கள் 9 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன – திமுக தரப்பு வாதம்.
மாவட்ட தேர்தல் அதிகாரிதான், தொகுதி வரையறை அதிகாரியாகவும் உள்ளார் – திமுக.
தொகுதி வரையறை உள்ளிட்ட சட்ட விதிகளை பின்பற்றாமல் தேர்தல்அறிவிக்கப்பட்டுள்ளது – திமுக.
தொகுதி மறு வரையறை, இட ஒதுக்கீடு என எல்லா பணிகளும் நிறைவடைந்து விட்டது – மாநிலத் தேர்தல் ஆணையம்.
தொகுதி மறுவரையறை பணிகள் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி செய்துள்ளோம். அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் படியே புதிய மாவட்டங்களுக்கு வார்டு மறு வரையறை செய்ய முடியும் – தேர்தல் ஆணையம்
புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வையுங்கள்: தமிழக அரசு
தடைவிதித்தால் மொத்தமாக தடைவிதியுங்கள் இல்லை என்றால் குழப்பம் ஏற்படும்: திமுக வாதம்
நாடாளுமன்றம் என்ன விதி வகுத்துள்ளதோ அதன்படியே உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வேண்டும் – உச்சநீதிமன்றம்
குறுக்கு வழியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது – உச்ச நீதிமன்றம்
தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்தபின், எந்த நீதிமன்றத்தாலும் தள்ளி போட முடியாது – தமிழக அரசு
தேவைப்பட்டால் தேர்தலை எங்களால் தள்ளி போட முடியும் – நீதிபதிகள்