திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்குக் கடந்த 4-ம் தேதி, வாட்ஸ்அப்பில் ஆபாசப் படங்கள் வந்தது. அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், வாட்ஸ் அப்பில் அந்த நபரை திட்டித் தீர்த்தார். போன் செய்து கண்டித்தபோது, எதிர் முனையில் பேசிய அந்த நபர் பெண் குரலில் அருவருக்கத்தக்க பாலியல் வார்த்தைகளால் பேசியிருக்கிறார்.
அழைப்பைத் துண்டித்த பிறகும், வாட்ஸ்அப்பில் ஆபாசப் படங்களை அந்த நபர் அனுப்பிக்கொண்டே இருந்தார். இதுபற்றி கடந்த 8-ம் தேதி, திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி டாக்டர் விஜயகுமாரிடம் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார்.
அவரின் உத்தரவின் பேரில், நாட்றம்பள்ளி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, ஆபாசப் படம் வந்த நம்பரின் சிக்னலை ஆய்வுசெய்ததில், அந்த நபர் சென்னையில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. அங்கு சென்ற காவல்துறையினர், சிக்னலை வைத்தே அவரைப் பிடித்துக் கைது செய்தனர்.
நாட்றம்பள்ளி காவல் நிலையம் அழைத்துவந்து தங்கள் பாணியில் விசாரணையை நடத்தினர். தென்காசி மாவட்டம், தலைவன் கோட்டை முள்ளிக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜீ என்பவரின் மகன் வினோத் (24) என்பதும், சென்னை குரோம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிவதும் தெரியவந்தது.
சென்னையில், கல்லூரி மாணவியின் செல்போனைத் திருடிய வினோத் அதில் பதிவுசெய்யப்பட்டிருந்த 30-க்கும் மேற்பட்ட பெண்களின் நம்பருக்கு ஆபாசப் படங்களை அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் ஒப்புக்கொண்டார். அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
`இதுபோன்று யாரேனும் ஆபாசமான செய்தியை அல்லது புகைப்படத்தை வெளியிட்டாலோ அல்லது பகிர்ந்தாலோ அந்தத் தகவலை அந்தந்த எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கலாம். விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்று திருப்பத்தூர் எஸ்.பி விஜயகுமார் கூறியுள்ளார்.