தென்காசி மாவட்டம் ஆய்க்குடி அமர் சேவா சங்கத்தின் நிறுவனர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அமர் சேவா சங்கத்தின் நிறுவனர் எஸ். ராமகிருஷ்ணன் 1981 ஆம் வருடம் அமர் சேவா சங்கத்தைத் தொடங்கி, கடந்த 38 வருடங்களாக பல்வேறு பணிகளைச் செய்து வருகிறார். மாற்றுத்திறனாளிகள் இந்த சமுதாயத்தில் ஒருங்கிணைந்து வாழ மறுவாழ்வுப் பணிகளைச் செயல்படுத்தி வருகிறார்.
1975 ஜனவரி 10ம் தேதியன்று நடந்த கடற்படைக்கான தகுதித் தேர்வின்போது ஏற்பட்ட விபத்தினால் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட அவர், தன்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகள் சிரமங்களைப் போக்க எண்ணி சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உள்ள மாற்றுத் திறனாளிகள் அனைவருக்குமான பணிகளை மேற்கொண்டு, அவர்களுக்கு உணவு, உறைவிடம், கல்வி, தொழிற்பயிற்சி, உடலியக்கப் பயிற்சிகள் போன்ற அடிப்படைத் தேவைகள் அனைத்தும் வழங்க ஆவன செய்து வருகிறார்.
அவருக்கு பத்மஸ்ரீ விருது அளித்து மத்திய அரசு கௌரவித்துள்ளது இப்பகுதியினரிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.