பாஜக.,வில் இணைந்துள்ளார் பிரபல பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால். பாபிதா போகத்துக்குப் பின்னர் தற்போது சாய்னா நேவால் பாஜக.,வில் இணைந்துள்ளார். அவருடன் அவரது சகோதரியும் பாஜக.,வில் இணைந்துள்ளார்.
தில்லியில் உள்ள பாஜக., அலுவலகத்தில் பாஜக., நிர்வாகிகள் முன்னிலையில் சாய்னா கட்சியில் இணைந்துள்ளார். அதன் பின்னர் சாய்னா நேவால் செய்தியாளர்களிடம் கூறியபோது…
இரவு , பகல் பாராமல் பிரதமர் உழைப்பது எனக்கு பிடித்திருந்தது. நாட்டிற்காக நல்லது செய்ய விரும்பினேன். பாஜக., தான் நாட்டிற்கு நல்ல பணிகளைச் செய்து வருகிறது. கட்சியில் இணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
29 வயதாகும் சாய்னா நேவால், இந்தியாவில் அதிகம் புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களில் ஒருவர். ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த சாய்னா நேவால், ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா விருது உள்ளிட்ட விளையாட்டுத் துறை சார்ந்த விருதுகள் பல பெற்றுள்ளார். சர்வதேச அளவில் 24 க்கும் அதிகமான போட்டிகளில் வென்று பேட்மிண்டன் பட்டங்களை பெற்றவர். லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றவர்.
முன்னதாக, பிரதமர் மோடியைப் புகழ்ந்து அவ்வப்போது டிவிட்டர் பதிவுகளில் கருத்துகளைத் தெரிவித்து வந்தார். மேலும், தாம் பாஜக.,வில் விரைவில் இணையவுள்ளதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில், அவர் தன்னை இன்று பாஜக.,வில் இணைத்துக் கொண்டார்.