கல்கண்டில் பிளாஸ்டிக் போன்ற பொருள் கலப்படம் செய்து வருவதாக பகீர் கிளப்புகிறார் ஒரு பட்டாச்சார்.
வேகுப்பட்டி அனுமான் கோயில் அர்ச்சகர் சொல்கிறார் என்று கூறி ஒரு வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இவர், வேகுப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலை சேர்ந்தவர். படத்தில் அவரின் பின்னால் தெரிவது வேகுப்பட்டி ஆஞ்சநேயர் விக்ரகம். மனம் நொந்து பேசுகின்ற அவரின் கூற்றை கவனியுங்கள். நம் வாங்கும் கல்கண்டுகளையும் நன்கு பார்த்தபின் குழந்தைகளுக்கு கொடுங்கள்… என்று கூறி பகிரப் படும் அந்த வீடியோவில்…
கோயில்களில் சுவாமிக்கு நிவேதனமாகத் தரப்படும் கல்கண்டில் கூட கலப்படம் செய்கிறார்கள் என்று பகீர் கிளப்புகிறார் இந்த பட்டாச்சார்.
அவர் இதுகுறித்து கூறும் போது, பெருமானுக்கு நிவேதனம் செய்ய பிரசாதமாக இதனைக் கொண்டு வந்து கொடுக்கிறார்கள். இந்த கல்கண்டை நிவேதனம் செய்து, குழந்தைகளுக்கும் சிறுவர் சிறுமியர் என அனைவருக்கும் பிரசாதமாகக் கொடுக்கிறோம். ஆனால் இதில் இப்போது கலப்படம் செய்துவருகின்றனர்.
கல்கண்டுடன் பிளாஸ்டிக் போன்ற வெள்ளை உருண்டைகள் கலப்படம் ஆகின்றன. இவற்றை நீரில் போட்டு ஊற வைத்தாலும், அவை கரையாமல் அப்படியே ஒரு நாள் ஆனாலும் இருக்கின்றன. இவற்றை உண்ணும் நபர்களுக்கு எந்த வியாதிகள் எல்லாம் வருமோ..?! என்று எச்சரிக்கிறார் இவர்.