சிஏஏ-வுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்று சட்டப்பேரவைத் தலைவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்!
சபாநாயகர் அறிவிப்புக்கு சட்டப்பேரவையில் திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. முன்னதாக, இஸ்லாமியக் கூட்டமைப்புகள் சார்பில், சட்டப் பேரவையை நோக்கி லட்சக்கணக்கானோரை திரட்டி, முற்றுகைப் போராட்டம் நடத்துவோம் என்று இஸ்லாமிய அமைப்புகள் கூறியிருந்தன. இந்த நிலையில், சிஏஏ.,வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்று சட்டப் பேரவைத் தலைவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, வண்ணாரப்பேட்டையில் இச்லாமிய அமைப்புகள் மேற்கொண்டு வரும் தேசவிரோத, சட்ட விரோதப் போராட்டம் குறித்து பேரவையில் பேசினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
முதியவர் இறந்ததாக மாநிலம் முழுவதும் வதந்தி பரப்பி கலவரத்தை உருவாக்க நினைத்தார்கள்! அமைதி பூங்காவான தமிழகத்தில் வன்முறை நிகழ்வுகளை உருவாக்க சில கட்சிகள் திட்டமிட்டுள்ளது என்று சென்னை, வண்ணாரப்பேட்டையில் சிஏஏ எதிர்ப்பு நிகழ்ச்சியில் காவல்துறை எடுத்த நடவடிக்கை குறித்து ஆதரவாக கருத்து தெரிவித்த முதல்வர் பழனிச்சாமி, மறைமுகமாக திமுக., குறித்து பரபரப்பு குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளார்.
வண்ணாரப்பேட்டையில் உரிய அனுமதியின்றி போராட்டம் நடத்தப் பட்டு, பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும், கடந்த வெள்ளிக்கிழமை வண்ணாரப்பேட்டையில் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்று குற்றம் சாட்டினார்.
சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்தது என்ன என்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார். அப்போது, இயற்கையாக உயிரிழந்த ஒருவர் குறித்து தவறான தகவல் பரப்பப்பட்டு இரவு போராட்டம் நடத்தப்பட்டது என்றும், போராட்டக்காரர்களை அழைத்து பேசியும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள் என்றும் கூறினார்.
வேண்டுமென்றே சில சக்திகளின் தூண்டுதலின் பேரில் போராட்டம் நடைபெற்று வருகிறது என்று கூறிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அது எந்த சக்தி, அல்லது சக்திகள் என்பதைத் தெரிவிக்க மறுத்துவிட்டார்.