மதுரை மாவட்டத்தில் இன்று ஒரு நாள் அடைக்கப்பட்ட துணிக் கடைகள்.. மக்கள் கூட்டத்தை தவிர்க்க..!
மதுரை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க அணைத்து ஜவுளிக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஐந்தாயிரம் ஜவுளிக்கடைகளுக்கு மக்கள், ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகம் கடைக்கு வருவார்கள் என்றும் சமூக பரவலை கடைபிடிக்க மாட்டார்கள் என ஜவுளிக் கடையின் உரிமையாளர் கருதி இன்று ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் விடுமுறை என கடையின் முன்பாக எழுதி வைத்திருந்தனர். இதனால் மதுரை நகரில் விளக்குத்தூண், மேலமாசி வீதி, கீழமாசி வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன!
காசு இல்லை.. காய் வாங்க ஆள் இல்லை….
மதுரை நகரில் பல இடங்களில் அதிகளவில் காய்கறி தாற்காலிக கடைகள் திறந்தும் வாங்க ஆள் இல்லாமல், வெறிச்சோடி காணப்பட்டது
மதுரை சம்பக்குளம், அழகர்கோயில் சாலை, சூர்யாநகர், புதூர், கருப்பாயூரணி ஆகிய பகுதிகளில் சாலையோரமாக தாற்காலிக கடைகள் அதிகளவில் திறக்கப்பட்டிருந்தன.
இருந்த போதிலும், சம்பக்குளம், அழகர்கோயில் சாலை ஆகிய பகுதிகளில் காய்கறிகள் வாங்க போதிய ஆட்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன.
இது குறித்து விசாரித்ததில், மதுரை நகரில் பல இடங்களில் தாற்காலிக காய்கறி கடைகள் அதிகளவில் திறகப்பட்டாலும், மக்கள் மத்தியில் பணபுழக்கம் குறைவு காரணமாக பெரிய வெங்காயம் கிலோ ரூ. 10..க்கும், வெண்டைக்காய் கிலோ ரூ. 20. க்கும், தக்காளி, கத்தரி ஆகியவை ரூ. 10..க்கும் பீட்ருட் கிலோ ரூ. 20..க்கும் விற்பணை செய்யப்பட்டாலும், காய்கள் வாங்க மட்டும் கூட்டம் குறைவாக இருந்தது. மேலும், தாற்காலிக கடைகள் அதிகமானதாலும் கூட்டம் குறைவுக்கு காரணம் என்றார் வண்டியூர் டி. குப்பு.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை