தமிழகத்தில் இன்று புதிதாக 688 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து மொத்த பாதிப்பு 12 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்துள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று மட்டும் 688 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. துபாய், குவைத், மலேசியாவிலிருந்து வந்த 36 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் குணமாகி 489 பேர் வீடு திரும்பியதையடுத்து, இதுவரை குணமானோர் எண்ணிக்கை 5,895 ஆக அதிகரித்தது.
சென்னையில் மட்டும் 552 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. 3 பேர் இன்று உயிரிழந்தனர். இதையடுத்து, தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு 84 ஆக உயர்ந்தது. உயிரிழந்த 3 பேரில் இருவர் சென்னையிலும், ஒருவர் திருவள்ளூரிலும் உயிரிழந்தனர். 82 வயது மற்றும் 72 வயது முதியவர்கள் இன்று சென்னையில் உயிரிழந்தனர். திருவள்ளூரை சேர்ந்த 64 வயது முதியவரும் இன்று உயிரிழந்தார்.
இன்று கொரோனா உறுதி செய்யப்பட்ட 688 பேரில், 552 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். இதை அடுத்து சென்னையில் மொத்த பாதிப்பு 7,672 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் அதிக கொரோனா பாதிப்புள்ள மாவட்டமாக சென்னை உள்ளது.
சென்னை மாதவரம் பால் பண்ணையில், ஏற்கெனவே 8 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ள நிலையில், மேலும் 4 ஊழியர்களுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் அதிகபட்சமாக திங்களன்று 1,08,233 மாதிரிகள் கொரோனா பரிசோதனை. இந்தியாவில் இதுவரை 24,25,742 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப் பட்டுள்ளன என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.