சீனாவின் 59 செயலிகளை இந்தியா தடை செய்துள்ள நிலையில், சீனாவின் சமூக ஊடகமான வெய்போவில் இருந்து விலகியுள்ளார் பிரதமர் மோடி.
கடந்த மாதம் 15ஆம் தேதி லடாக்கின் கல்வான் பகுதியில் சீன படைக்கும் பாரத ராணுவத்தினருக்கும் இடையே நடந்த மோதலில் பாரத வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து இந்தியாவில் சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.
இதனிடையே, இந்திய பயனர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும், தனிநபர் தகவல்கள் சீன அரசுக்கு உளவு அனுப்பப் படுவதாகவும் எழுந்த குற்றச்சாட்டினால், 59 சீன ‘ஆப்’களை இந்திய அரசு தடை செய்தது.
பிரதமர் மோடி அண்மைக் காலங்களில் சீனாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார். அப்போது சீனாவின் சமூகத் தளமான வெய்போவில், சீனர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தனது கணக்கை தொடங்கியிருந்தார்.
கல்வான் பிரச்னையில் இந்திய அரசு மீதான வெறுப்பு காரணமாக பிரதமர் மோடியின் பேச்சுக்கள் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளரின் அறிக்கைகள் போன்றவற்றை சீனாவின் அதிகாரப்பூர்வ இணைய தளங்கள் இருட்டடிப்பு செய்தன.
இந்நிலையில் பிரதமர் மோடியும் சீனாவின் தளமான வெய்போவில் தொடக்கி இருந்த கணக்கில் இருந்து விலகினார்.
மோடியின் வெய்போ கணக்கில் 120 பதிவுகள் இருந்தன. அதில் 115 பதிவுகள் வரையில் நீக்கப்பட்டன. இருப்பினும் சீன அதிபர் ஜிஜின்பிங்குடன் சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள் மட்டும் அகற்றப் படாமல் இருந்தது. அனேகமாக முழுவதும் நீக்கப்பட்டு, டெலிட் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.