கொரோனா வைரஸ் தொற்று தொடங்கி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து பலர் பல்வேறு உதவிகளை சிரமப்படும் மக்களுக்கு செய்து வருகின்றனர்.
தேசிய அளவில் தொடங்கி தமிழகத்தில் பொது ஊடகம் முடக்கம் அறிவிக்கப்பட்ட மார்ச் மாத கடைசி வாரத்தில் இருந்து சில நாட்கள் கழித்து பொதுமக்கள் படுகின்ற சிரமங்களையும் அன்றாடம் வேலைக்கு சென்று வருகின்ற மக்கள் உணவு இன்றி செயல்படுவதையும் கண்டு அவர்களுக்காக உதவுவதற்கு பலர் நாடு முழுதும் முயற்சி செய்து வந்தார்கள் சிலர் தனிப்பட்ட வகையிலும் பலர் இயக்கங்களாக சேர்ந்து கொண்டும் இந்த உதவிகளை செய்து வந்தார்கள் அவர்களில் ஒருவர் தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகரத்தில் வசிக்கும் கோமதிநாயகம்.
செங்கோட்டை நகர பாஜக துணை தலைவராக இருக்கும் ஆ.கோமதிநாயகம், ஏப்ரல் முதல் வாரத்திற்கு பிறகு ஒருநாள் ‘தாய்மடியில்’ என்ற பெயரில் வாட்ஸ்அப் குழு ஒன்றை தொடங்கி அதன் மூலம் உள்ளூர் மக்களை இணைத்து அவர்களுக்காக உதவிகள் பல செய்ய தொடங்கினார். அப்போதுதான் கடைகள் அடைக்கப்பட்டு நிலையில் உணவுப் பொருள் எதுவும் கிடைக்காத சூழலில் பலர் கஷ்டப்படுவது தெரியவந்தது இதையடுத்து அனைவருக்கும் இரண்டு வேளை உணவு தயாரித்து கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் செயலில் இறங்கினார்.
இவரது மனைவி, மகன்கள் உதவியுடன் வீட்டிலேயே உணவு தயாரித்து உணவு பொட்டலங்கள் கட்டி தினந்தோறும் மதியம் மற்றும் இரவு வேளைக்கும் சேர்த்து வரும் வகையில் இரண்டு இரண்டு பொட்டலங்களாகக் கட்டி, செங்கோட்டை நகரத்தில் உள்ள ஏழைகள் வசிக்கும் பகுதியிலும் பேருந்து நிலையம் மற்றும் சுற்றியுள்ள இடங்களிலும் உணவுக்காக தவிக்கும் மக்களுக்கு சென்று வழங்கிவந்தார்.
இவரது தன்னலமற்ற சேவையை பாராட்டி பலரும் உதவிகள் செய்தனர் அதன்மூலம் அவரது உணவு வழங்கும் பணி தடைபடாமல் தொடர்ந்து நடந்து வந்தது. இடையில் பொது முடக்கம் சற்று தளர்வு களுடன் தொடர்ந்தது கடைகள் திறக்கப்பட்டன பொதுப்போக்குவரத்து ஓரளவுக்கு செயல்பாட்டுக்கு வந்தது இருந்தபோதும் வேலைக்கு செல்ல வழியில்லாமல் வீட்டில் முடங்கிக் கிடக்கும் கூலித் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் நலனை கருத்தில் கொண்டு தனது உணவு வழங்கும் பணியை நிறுத்தி விடாமல் தொடர்ந்து செய்துவந்தார் கோமதிநாயகம்.
அவரது தன்னலமற்ற தொண்டுக்கு இன்று நூறாவது நாள். இதை முன்னிட்டு வழக்கமான உணவு வகைகள் மட்டுமின்றி சர்க்கரைப் பொங்கல் பாயசம் என்று உடன் சேர்த்து மக்களுக்கு வழங்கினார். இதை ஒரு முக்கிய நிகழ்ச்சியாகவே நண்பர்கள் குழு பார்த்தது. இந்த நிகழ்ச்சியில் பாஜக மூத்த வழக்கறிஞர் தலவனார் எம்.கணேசபாண்டியன் கலந்துகொண்டு உற்சாகப்படுத்த நூறாவது நாளை சிறப்பாக முடித்துள்ளார் கோமதிநாயகம். அவரது இந்த சேவையை ஊர் மக்கள் பலரும் பாராட்டினர்.
இது குறித்து ஆ.கோமதிநாயகம் தெரிவித்த போது, ‘தாயின் மடியில் நண்பர்கள் குழு’ ஆதரவற்ற முதியோர்களுக்கு உணவு வழங்க துவங்கி வெள்ளிக் கிழமை இன்றுடன் நூறு நாட்கள் ஆகிறது. இது வெற்றி விழாவோ அல்லது கொண்டாடப்பட வேண்டிய நாட்களோ அல்ல. இது போன்ற சூழ்நிலை எங்கும் யாருக்கும் ஏற்படாமல் இருக்கவே ஆதரவற்றவர்கள். பசியால் வாடுபவர்கள் என்று இந்த பூமியில் யாரும் இருக்கக்கூடாது என்பதே இறைவனிடம் நாம் வைக்கும் கோரிக்கை.
இருந்தாலும் இந்த முயற்சியில் எனக்கு பக்கபலமாக இருந்து உதவியவர்கள் அனைவரையும் அன்னை ஸ்ரீகாமாட்சி அம்மன் மடியில் (தாயின் மடியில் ) வைத்து நன்றியுடன் நினைவுகூர்கிறேன். இந்தப் பணியில் என் மனைவி உணவு தயாரித்துக் கொடுத்தார். என் மகன்கள் உள்ளிட்ட இளைய தலைமுறை, உணவை அனைவருக்கும் சென்று விநியோகிக்க உதவியது. அவர்களையும் நன்றியுடன் நினைவு கூர்கிறேன் என்றார்.