தேமுதிக தலைவர் விஜயகாந்த் கந்த சஷ்டி கவசம் புத்தகத்தை வைத்து பாராயணம் செய்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது பலரது பாராட்டையும் பெற்று வைரலாகி வருகிறது.
ஒவ்வொரு மதத்தினருக்கும் அவர்கள் மதத்தின் மீது நம்பிக்கை உண்டு. அடுத்தவரின் நம்பிக்கையை மற்றவர்கள் இழிவுபடுத்துவது தவறு. எம்மதமும் சம்மதம். ”வருடந்தோறும் கார்த்திகை மாதம் 6 நாட்களும் கந்தர் சஷ்டி விரதம் இருப்பது எங்கள் வழக்கம். இன்று ஆடி மாதம் சஷ்டி விரதத்தை முன்னிட்டு கந்தசஷ்டி கவசம் படித்தேன் ” என விஜயகாந்த் தனது ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார்.
மேலும், # தமிழ் கடவுள் முருகனுக்கு அரோகரா என்ற ஹேஷ்டேக்கையும் இணைத்துள்ளார்.
ஹிந்துக்களின் மன உணர்வுகளைப் புண்படுத்தும் விதத்தில், திமுக., திக., சார்புள்ள கறுப்பர் கூட்டம் என்ற அமைப்பு நாத்திகவாதம் என்ற பெயரில் இந்துக் கடவுளர்களையும் பண்டிகைகளையும் இழிவுபடுத்தி ஆன்லைன் பிரசாரங்களை மேற்கொண்டது. இதற்கு பாஜக., மட்டுமே அரசியல் ரீதியாக கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தது.
இந்நிலையில், இன்னமும் அரசியலுக்குள் வராத, அதே நேரம் ஆன்மிக அரசியலை முன்னெடுக்கப் போவதாகக் கூறிக் கொண்டிருந்த நடிகர் ரஜினிகாந்த் ஒரு கண்டனத்தை தெரிவித்து ட்விட்டர் பதிவு ஒன்றை சில தினங்களுக்கு முன் வெளியிட்டிருந்தார். தமது அந்தப் பதிவின் முடிவில், “கந்தனுக்கு அரோகரா… .எம்மதமும் சம்மதம்” என்று ரஜினி குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், நடிகர் விஜயகாந்த் தன் பங்குக்கு, அரசியல் ரீதியாக ஆதரவு தரும் வகையில், கந்த சஷ்டி கவசம் பின்னணியில் ஒலிக்க, புத்தகத்தை வைத்துக் கொண்டு படிக்கும் வீடியோவை அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.