மானாமதுரை அருகே மின்சாரம் தாக்கி ஒரு பசுவும், அதனைக் காப்பாற்ற முயன்ற மூதாட்டியும் மரணிக்க, மேலும் இரு மாடுகளுக்கு மின்சார ஷாக் ஏற்படாமல் இருக்க பலமாகக் குரைத்து அவற்றைக் காப்பாற்றிய நாய் மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ராஜகம்பீரம் பகுதியைச் சேர்ந்தவர் வேட்டைக்காள். 60 வயதான இவர், தினசரி மூன்று மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வார்.
இந்நிலையில் மானாமதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில், ராஜகம்பீரம் பைபாஸ் ரோடு அருகில் உள்ள ஒரு தோப்பில், மின் வயர் அறுந்து வேலியில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் இந்தத் தோப்பு வழியாக வேட்டைக்காள், மூன்று மாடுகளுடன் மேய்க்க ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது முதலில் சென்ற சினையான பசுமாடு, வேலி அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்துள்ளது.
இதில் மின்சாரம் பாய்ந்து துடிதுடித்துக் கொண்டிருந்த பசுமாட்டைப் பார்த்து பதறிய வேட்டைக்காள், விவரம் அறியாமல் மாடு அருகே சென்றுள்ளார். அதில், அவரும் மின்சார தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த மாட்டின் மீதே விழுந்து உயிரிழந்துள்ளார்.
அந்த நேரம், வேட்டைக்காளுடன் பின் தொடர்ந்து வரும் வளர்ப்பு நாய், பின் புறம் தொடர்ந்து வந்த மற்ற இரண்டு பசு மாடுகளையும் அருகே வர விடாமல் குரைத்து அவற்றைத் தடுத்து நிறுத்தி உள்ளது. நாயின் குரைப்பு சத்தம் கேட்டு வந்த வேட்டைக்காளின் உறவுப் பெண் லெட்சுமி வேட்டைக்காள் அருகில் சென்று தூக்க முயன்ற போது, அவரையும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப் பட்டுள்ளார். ஆயினும் அவர் உயிர் தப்பியுள்ளார்.
தகவல் அறிந்து அந்தப் பகுதியில் இருந்தவர்கள் ஓடிவந்துள்ளனர். வேட்டைக்காளின் உடல் அருகே சோகத்துடன் அமர்ந்திருந்த நாய், பின்னர் அவரின் உடல் மீது உருண்டு புரண்டு ஓடியது அங்கிருந்தவர்களை கண்கலங்கச் செய்தது.