விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறும் முறை குறித்து உயர் நீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை விதித்து, இது குறித்த வழக்கை முடித்து வைத்துள்ள நிலையில், தாங்கள் திட்டமிட்டபடி, நீதிமன்ற உத்தரவுக்கு உட்பட்டு விநாயகர் சதுர்த்தி விழாவை எளிமையாகக் கொண்டாடுவதாக இந்து முன்னணி இயக்கம் அறிவித்துள்ளது.
இந்துமுன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கையில்…
இந்த ஆண்டு கொடிய வைரஸ் தாக்குதல் ஏற்பட்டு இருக்கின்ற சூழ்நிலையில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் விநாயகர் சதுர்த்தி விழா நடக்க வேண்டும் என்பதில் இந்துமுன்னணி தெளிவான நிலைப்பாட்டில் இருக்கிறது
தமிழகத்தில் நோய் தாக்கம் ஏற்பட்ட நாள் முதல் பல்வேறு நலத்திட்ட பணிகளை தமிழகமெங்கும் செய்து ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு சேவை செய்து இருக்கிறது இந்து முன்னணி பேரியக்கம். ஆகவே சமுதாய அக்கறையோடும் பொறுப்புணர்வோடும் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவினை திட்டமிட்டது.
அந்த அடிப்படையில் பொதுக்கூட்டங்கள் நடைபெறாது; ஊர்வலங்கள் இருக்காது; சேர்ந்து சென்று விசர்ஜனம் (விநாயகர் கரைக்கும்) நிகழ்ச்சிகள் இருக்காது என்று இந்து முன்னணி ஏற்கெனவே அறிவித்திருந்தது.
இந்த நிலையில் மாண்புமிகு தமிழக முதல்வர் உள்பட பல்வேறு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. அதன் பிறகு தற்போது உயர் நீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை சொல்லி இருக்கிறது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா மிகுந்த எச்சரிக்கையோடும் பாதுகாப்போடும் கொண்டாடப்படும்.
22 ஆம் தேதி அன்று தனியார் இடங்களில், வீடுகளில், கோவில்களில் விநாயகர் திருமேனிகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு அவரவர் ஏற்பாடுகளில் கூட்டம் சேராமல் அன்று மாலையே விநாயகர் திருமேனிகள் விசர்ஜனம் செய்கின்ற நிகழ்ச்சிகள் நடைபெறும்.
அரசும் அரசு அதிகாரிகளும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். விநாயகரின் அருளால் இந்த கொடிய நோய்த் தொற்றானது அழியும்; தமிழகம் மீண்டும் நல்ல நிலையை அடையும்…. என்று இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்