மூத்த ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகரும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தமிழ் இதழான விஜயபாரதம் பத்திரிகையின் ஆசிரியருமான ம.வீரபாகு இன்று காலமானார். அவருக்கு வயது 72.
கடந்த வாரம் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி காரணமாக பரிசோதனை மேற்கொண்டு, பின்னர் சிகிச்சையில் இருந்தார். பிறகு உடல் நலம் தேறி வந்த நிலையில், நேற்று மீண்டும் அவருக்கு உடல்நலனில் பின்னடைவு ஏற்பட்டது. தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில், இன்று முற்பகல் 11.40 மணி அளவில் அவர் காலமானதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
திருநெல்வேலியை பூர்வீகமாகக் கொண்ட ம.வீரபாகு, இந்து இயக்க சிந்தனைகளில் ஊறியவர். தொடக்க காலத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிரசாரகராக இருந்தார். பின்னர் இந்து முன்னணி அமைப்பின் மாநில அமைப்பாளராக சுமார் 10 வருடங்கள் பணி செய்தார். தொடர்ந்து விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பிலும், பின்னர் ‘சங்க செய்தி’ ஆசிரியராகவும் இருந்த வீரபாகு, பின்னாளில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் இதழான விஜயபாரதம் வார இதழின் பொறுப்பேற்று செயல்பட்டார்.
மேடைப்பேச்சாளராக, எழுத்தாளராக தன்னை முன்னிறுத்திக் கொண்ட வீரபாகு, திருமணம் செய்து கொள்ளவில்லை.
வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் முகலாய படையெடுப்பு காரணமாக வேறு இடத்தில் தூக்கிச் செல்லப்பட்ட சிவலிங்கம் மீண்டும் 1982ஆம் ஆண்டு கோயில் கர்ப்ப கிரகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டதற்கு மூல காரணமாக இருந்தவர் ம.வீரபாகு. பழகுவதற்கு எளியவர், நல்ல பண்பாளர் என்று அவரைக் குறித்த நினைவுகளைப் பகிர்ந்து வருகின்றனர் உடன் பழகியவர்கள்.