பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜாவின் தந்தை ஹரிஹர ஐயர் சனிக்கிழமை நேற்று இரவு 10.10 மணி அளவில் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 88.
1929ல் தஞ்சாவூர் மாவட்டம் மெலட்டூரில் பிறந்தவர் ஹரிஹரன். சிறு வயதிலேயே தன்னை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இணைத்துக் கொண்டவர். 1948 ஆம் ஆண்டில், மஹாத்மா காந்தி கொலை வழக்கில் அவதூறுப் பிரசாரத்தால் அப்போதைய நேரு அரசு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு தடை விதித்த போது, ஆர்.எஸ்.எஸ். மீதான தடையை விலக்கக் கோரி போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு கண்ணூர் சிறையில் ஜனா.கிருஷ்ணமூர்த்தி, மதுரை ராமசாமி ஆகியோருடன் அடைக்கப்பட்டார். தொடர்ந்து ஆறு மாதங்கள் சிறையில் வாழ்வைக் கழித்தார்.
மூத்த ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம்சேவகரான ஹரிஹர ஐயர், யோகக் கலை மற்றும் சமஸ்கிருதத்தில் பாண்டித்யம் மிக்கவர்.
உடற்பயிற்சிக் கல்வியில் சிறந்து விளங்கினார். அதில் தங்கப்பதக்கம் பெற்றவர். உடற்பயிற்சிக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவ 5 நூல்கள் எழுதியுள்ளார். வர்மம், பிஸியோதெரபி உள்ளிட்ட மருத்துவ சிகிச்சை முறைகளிலும் சிறந்து விளங்கியவர். பக்கவாத நோயாளிகளுக்கு உதவிபுரிந்துள்ளார். தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தின் சிறந்த கல்வியாளருக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றவர்.
மறைந்த ஹரிஹர ஐயருக்கு ஹெச்.ராஜா உள்பட 5 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர்.
இவரது இறுதிச்சடங்கு ஞாயிறு இன்று மாலை 4 மணிக்கு காரைக்குடி சுப்பிரமணியபுரம் 9வது வீதியில் உள்ள அவர்களது இல்லத்தில் நடைபெறுகிறது.
தகவலுக்கு: N.சொக்கலிங்கம் பாஜக., மாவட்ட தலைவர் 9443112969