ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலில், வரும் புரட்டாசி சனிக்கிழமை தரிசனத்துக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து சுவாமியை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வைணவர்கள் போற்றித் தொழும் நூற்றி எட்டு திவ்ய தேசங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயில். இங்கே புரட்டாசி சனிக் கிழமைகளில் சுற்றுப் பகுதிகளிலுள்ள பக்தர்கள் அதிக அளவில் தரிசனம் செய்ய வருகின்றனர்.
ஆனால் தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, கொரோனா தொற்று தடுப்பில் சமூக இடைவெளி கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து, அரங்கநாதர் திருக்கோவிலில் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட அளவிலான பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
பக்தர்கள் கூட்டமாகக்கூடி, ஒரே இடத்தில் குழுமி காத்திருப்பதைத் தவிர்ப்பதற்காக கட்டணமில்லா தரிசனம் மற்றும் கட்டண தரிசனத்துக்கு அரங்கநாதர் திருக்கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
இதன்படி, இணையதளம் மூலம் முன்பதிவு செய்து தரிசனத்துக்கு ஏற்பாடு செய்து கொள்ளலாம். அரங்கநாதர் திருக்கோயில் இணையத www.srirangam.org என்ற இணையதள முகவரியில் கட்டண சேவை, இலவச சேவை என இரு வழிகளிலும் முன்பதிவு செய்து கொள்ள வசதி செய்யப் பட்டுள்ளது.
முன்பதிவு செய்து கொள்பவர்கள் மட்டுமே வரும் செப்.19, செப்.26, அக்.3, அக்.10ஆம் தேதிகளில் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் என ஸ்ரீரங்கம் திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.