சேலத்தில் அதிகாலையில் அதிர்ச்சி சம்பவம்.. 4ஆவது மாடியிலிருந்து குதித்து இருகுழந்தைகளின் தாய் தற்கொலை
சேலத்தில் நான்காவது மாடியிலிருந்து பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை குறித்து சேலம் உதவி கமிஷனர் விசாரணை நடக்கிறது. தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்ணின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.
சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ளது அஸ்தம்பட்டி. இங்குள்ள ராஜாஜி ரோடு பகுதியில் லட்சுமி கிருபா அபார்ட்மெண்ட் உள்ளது. இது நான்கு மாடி கொண்ட அபார்ட்மெண்ட் . இந்த அடுக்குமாடி குடியிருப்பில் சண்முகசுந்தரம் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
சண்முகசுந்தரம் கதவு மற்றும் ஜன்னல் மொத்த விற்பனை நிலையம் வைத்துள்ளார். இவரது மனைவி விக்னேஷ்வரி (40). இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.அதிகாலை ஐந்தரை மணி அளவில் விக்னேஸ்வரி வீட்டிலிருந்து வெளியில் வந்தார். பின்னர் மொட்டை மாடிக்கு அவர் சென்று அங்கு இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனை அறிந்த பொதுமக்கள் உடனே அஸ்தம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.உடனே போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர். பின்னர் விக்னேஸ்வரி சடலம் உடற்கூறு ஆய்வு செய்ய சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
விக்னேஸ்வரிக்கு சில மாதங்களாக உடல்நிலை சரியில்லை என்றும், மனநிலை சரியில்லாதவர் போல் நடந்து கொண்டார் என்றும் கூறப்படுகிறது. மேலும் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார் என்றும் தெரிகிறது.
இதில் மனமுடைந்து விக்னேஸ்வரி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் உறவினர்கள் காவல் துறை அதிகாரிகளிடம் தெரிவித்து உள்ளனர். இதனை அறிந்த சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் ,இந்த தற்கொலை குறித்து விசாரிக்க தனிப்படை அமைத்து உள்ளார்.
இதில் அஸ்தம்பட்டி உதவி கமிஷனர் ஆனந்தகுமார் மற்றும் அஸ்தம்பட்டி காவல் ஆய்வாளர் பொன்ராஜ் ஆகியோர் விசாரணை செய்து வருகிறார்கள்.
விக்னேஸ்வரி தற்கொலை குறித்து சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
சேலத்தில் அதிகாலையில் நான்காவது மாடியிலிருந்து பெண் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- செய்தி: வரதராஜ்